For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'அழகிரி': ஜெ-வைகோ மீது திமுக புகார்

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னை: மு.க.அழகிரி மீது தேவையற்ற, ஆதாரமற்ற புகார்களைக் கூறி வரும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி திருமங்கலம் தொகுதி திமுக வேட்பாளர் லதா அதியமான், தேர்தல் பார்வையாளரிடம் புகார் கொடுத்துள்ளார்.

லதா அதியமான் தனது புகாரில் கூறியுள்ளதாவது:

திருமங்கலத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே அ.தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் தி.மு.க. ஆதரவாக பிரசாரம் செய்து வரும் மு.க.அழகிரியை தடுத்து நிறுத்த எத்தனையோ
முயற்சிகளை செய்து வருகின்றனர்.

இந்திய தேர்தல் கமிஷன் முதல் பல்வேறு அதிகார மையங்களுக்கு அவர்கள் மீண்டும், மீண்டும் அக்கட்சியின் எம்.பி.க்கள் மூலமாக புகார் மனு கொடுத்து வருகின்றனர். திருமங்கலம் தொகுதியில் இருந்து மு.க.அழகிரியை வெளியேற்ற வேண்டும் என்று கூறிவருகின்றனர்.

மு.க.அழகிரி மீது பல கிரிமினல் வழக்குகள் இருப்பதாகவும் அவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறுகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக தேர்தல் பிரசாரத்தின் போது ஜெயலலிதாவும், வைகோவும் மு.க.அழகிரி மீது அபாண்டமான ஒரு குற்றச்சாட்டை, விவரத்தை சரிபார்க்காமல் கூறியுள்ளனர்.

அவருக்கு எதிராக ஆந்திர மாநிலம் சித்தூரில் நடந்த குற்ற வழக்கு ஒன்றை தனது செல்வாக்கை பயன்படுத்தி, சாட்சிகளை கலைத்து, தனக்கு சாதகமாக மாற்றிவிட்டார் என்று கூறியுள்ளனர். அந்த வழக்கு சம்மந்தமான விவரங்களை சரிபார்க்காமல் இருவரும் கூறியுள்ள இந்த குற்றச்சாட்டு தேர்தல் கமிஷன் விதித்துள்ள தேர்தல் விதிமுறை 3(2)க்கு எதிரானதாகும்.

சித்தூர் செஷன்ஸ் கோர்ட்டில் அந்த வழக்கு முறையாக நடத்தப்பட்டு, சாட்சி விசாரணை அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டது என்பதை இருவரும் நன்றாக அறிவார்கள். கோர்ட்டு நடவடிக்கைகளை அவதூறு செய்வதோ, நீதித்துறை விவகாரத்தை இழிவு செய்வதையோ
அனுமதிக்க முடியாது.

அவர்களது இந்த அவதூறு பேச்சு குற்ற வழக்கு தொடர்வதற்கு ஏதுவானது. அந்த வழக்கு விசாரணையின் போது, அரசு சாட்சிகளுக்கு வக்கீலை நியமித்து அ.தி.மு.க. வேட்பாளர் உதவி செய்தார் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.


இந்த அவதூறான பேச்சு தொடர்பாக, தனியாக நீதிமன்றத்தில் குற்ற வழக்கு தொடர இருக்கிறோம். எனவே, ஜெயலலிதா, வைகோ மற்றும் அந்த கட்சியின் கூட்டணியினருக்கு தேர்தல் பிரசாரத்தின்போது தனிப்பட்ட முறையில், ஆதாரமற்ற குற்றசாட்டுகளை கூறுவதோ,
விவரங்களை சரிபார்க்காமல் பேசுவதோ கூடாது என்று உத்தரவிட வேண்டும். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தோல்வி பயத்தில் பேசும் ஜெ.:

இதற்கிடையே, தேர்தல் பார்வையாளர் சுனில்குமார் குஜூரிடம், திமுக முன்னாள் எம்.பி. சண்முகசுந்தரம் தலைமையில் எம்.பி.க்கள் கிருஷ்ணசாமி, கே.சி. பழனிச்சாமி, பவானி ராஜேந்திரன், சுகவனம், காங்கிரஸ் எம்.பி. என்.எஸ்.வி. சித்தன் ஆகியோர் ஒரு மனு கொடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் பேசுகையில்,
தேர்தல் பிரசாரத்தின் போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர்
ஜெயலலிதா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சொல்லி வருகிறார்கள்.

தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்று விடும் என்ற தோல்வி பயத்தில் தான் தேர்தலை நிறுத்துவதற்காக அவர்கள் இப்படி பேசி வருகிறார்கள். தி.மு.க.வினர் தீவிர தேர்தல் பணியாற்றி வருவதை தடுக்கும் வகையில் அவர்கள் தவறான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தி.மு.க. தேர்தல் பணிக்குழு தலைவர் மு.க.அழகிரியை குறி வைத்து பிரசாரத்தின் போது ஜெயலலிதா தாக்கி பேசி வருகிறார். ஒரு வழக்கு இருந்ததாகவும் அது சரியான முறையில் விசாரணை செய்யப்படாமல் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டு பேசி
வருகிறார். இது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு ஆகும்.

இது குறித்து தேர்தல் பார்வையாளரிடம் மனு கொடுத்துள்ளோம்.

தேர்தல் விதிமுறை மீறல் 2ன் கீழ் ஜெயலலிதா, வைகோ ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளோம்.

வழக்கு சரிவர விசாரிக்கப்படவில்லை என்று கூறுவது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். இதற்காக ஜெயலலிதா, வைகோ ஆகியோர் மீது வழக்கு தொடருவோம். தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா பேசிய விவரங்களை ஆதாரங்களாக தேர்தல் பார்வையாளரிடம்
கொடுத்துள்ளோம் என்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X