அப்பாடா.. அப்பாயின்மெண்ட் கிடைத்தது!!
சென்னை: இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அருண்குமார் கூறினார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் அருண்குமார், முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். விஜய்காந்துடன் கூட்டணிக்கு காங்கிரஸ் தயார் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் தான் இநத அருண்குமார். இதையடுத்து இவரை பிராமணர் என்று தி.க. தலைவர் வீரமணி மூலம் தாக்கியது திமுக. இதைத் தொடர்நது இவருக்கும் மேலாக அமைச்சர் வயலார் ரவியை ஒருங்கிணைப்பாளராக்கினார் சோனியா.
இதையடுத்து தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் என்ற வகையில் கூட்டணியின் முக்கிய கட்சியான திமுகவின் தலைவரான முதல்வர் கருணாநிதியை சந்திக்க பல மாதமாக அப்பாயின்மெண்ட் கேட்டு காத்திருந்தார் அருண்குமார். இந் நிலையில் அவருக்கு நேற்று தான் அனுமதி கிடைத்தது.
இதையடுத்து கருணாநிதியை சந்திக்க வந்த அருண்குமாருடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் ஆகியோரும் உடனிருந்தனர்.
ஒன்னுமே பேசலை.. அருண்குமார்:
இச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய அருண்குமார்,
முதல்வர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இந்தியாவின் சிறந்த தலைவர் கருணாநிதி. அவரை முதல் முதலில் சந்தித்து பேசியது பெருமையாக இருக்கிறது. அவரிடம் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தோ, தேர்தல் குறித்தோ எதுவும் நான் பேசவில்லை என்றார்.
அவரிடம் நிருபர்கள், இலங்கை பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன என்று கேட்டனர்.
அதற்கு அவர், இலங்கை தமிழர்கள் நம்முடைய சகோதரர்கள். அவர்களுக்கு எப்போதும் எங்களுடைய ஆதரவு உண்டு. அவர்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் (!!!). மற்றப்படி இந்த பிரச்சினையில் இரு நாட்டு அரசுகளும் பேசி தான் முடிவு எடுக்க முடியும் என்றார்.
இவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டதே முதல் தப்பு..!