கிறிஸ்தவ தலித்களுக்காக நில ஆர்ஜிதம்-முக்கிய தீர்ப்பு
சென்னை: கிறிஸ்தவ தலித் மக்களுக்காக, தமிழக அரசின் ஆதி திராவிடர் சட்டத்தின் கீழ் நில ஆர்ஜிதம் செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள தாமனூர் கிராமத்தில் வசித்து வரும் 37 கிறிஸ்தவ தலித் குடும்பங்களுக்காக தமிழக அரசு நிலத்தை ஆர்ஜிதம் செய்தது.
இதை எதிர்த்து கோபால் கவுண்டர், பெருமாள், ஜெயலட்சுமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், கிறிஸ்தவ தலித்களுக்காக நிலத்தை ஆர்ஜிதம் செய்ய தமிழக அரசின் ஆதிதிராவிடர் சட்டத்தில் இடமில்லை என்று அவர்கள் கூறியிருந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி சந்துரு விசாரித்தார். பின்னர், நில ஆர்ஜிதம் செய்ததை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.
அதுதொடர்பாக நீதிபதி சந்துரு பிறப்பித்த தீர்ப்பில், 1978-ம் ஆண்டு தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட ஆதிதிராவிடர் சட்டத்தின்கீழ் நிலத்தை ஆர்ஜிதம் செய்யலாம். ஆதிதிராவிடர்களின் நலத்திட்டத்துக்காக மட்டுமே நில ஆர்ஜிதம் செய்ய முடியும்.
குடியரசுத் தலைவர் அறிவிப்பு ஆணைப்படி கிறிஸ்தவ தலித்களுக்காக, இந்த சட்டத்தின்கீழ் நில ஆர்ஜிதம் செய்ய முடியாது. எனவே, இந்த நில ஆர்ஜித நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது.
இருப்பினும் மத்திய அரசு சட்டத்தின்கீழ் ஆர்ஜிதம் செய்வதை இந்த தீர்ப்பு தடுக்காது. இதற்காக முறையாக அறிவிப்பு ஆணை வெளியிட்டு மத்திய அரசு சட்டத்தின்கீழ் நில ஆர்ஜிதம் செய்ய 12 வாரத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.