லாரி ஸ்டிரைக்: பெட்ரோல் பஞ்சம்-பால், தண்ணீர் லாரிகளும் ஓடாதாம்

மேலும் டேங்கர் லாரிகளின் ஸ்டிரைக் காரணமாக சென்னை உள்பட அனைத்துப் பகுதிகளிலும் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நாளை முதல் பால், தண்ணீர் லாரிகளும் ஸ்டிரைக்கில் ஈடுபடப் போவதாக கூறப்படுவதால் மக்கள் பெரும் குழப்பமடைந்துள்ளனர்.
டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் பல ஆயிரம் டெக்ஸ்டைல் நிறுவனங்கள் உள்ளது. இந்த டெக்ஸ்டைல் நிறுவனங்களில் இருந்து சரக்கு தினசரி வெளி மாநிலங்கள், மற்றும் வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
அதே போன்று கோவை மாவட்டத்தில் 2 லட்சம் விசைத்தறிகள் மூலம் தினமும் 2 கோடி மீட்டர் துணிகள் உற்பத்தியாகிறது.
அவை, பிற இடங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக ஜவுளிகளை அனுப்ப முடியவில்லை. இதனால் பல கோடி மதிப்பிலான ஜவுளிகள் தேங்கியுள்ளது.
இதனால், விசைத்தறி தொழிலை நம்பியுள்ள ஒரு லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் திராட்சை, மக்காச்சோளம், வாழை மற்றும் காய்கறிகள், நவதானியங்கள், தேயிலை, பருத்தி போன்றவைகளை அயல் மாநிலங்களுக்கு அனுப்ப முடியாத நிலை உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 200 அரிசி ஆலைகளிலிருந்து அயல்மாநிலங்களுக்கு அனுப்பப்படும் அரிசி மூட்டைகளும் தேக்கமடைந்துள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர், சிவகாசி பகுதிகளிலிருந்து தினமும் ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான தீப்பெட்டிகள் வெளியிடங்களுக்கு அனுப்படவில்லை.
திருப்பூரில் இது வரை ரூ.210 கோடி பனியன்கள் தேக்கமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ரூ 90 கோடியில் இதர வர்த்தகமும் முடக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மதுரையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அனுப்பபட்டும் ஜவுளிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் முடங்கிப் போயுள்ளன.
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு:
இதற்கிடையே, டேங்கர் லாரிகளின் வேலைநிறுத்தம் காரணமாக தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்கைத் தொடங்கியுள்ளன. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் சப்ளை நின்று போயுள்ளது.
மேலும், விலை குறைப்பு விரைவில் இருக்கும் என்பதால் பெட்ரோல், டீசலை வாங்கி இருப்பு வைக்காமல் விட்டு விட்டனர் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள். இதன் காரணமாக பெரும்பாலான பங்குகளில் ஸ்டாக் தீர்ந்து போய் விட்டதாக போர்டு தொங்க விடப்பட்டுள்ளது.
சென்னை ஸ்தம்பி்ப்பு:
சென்னை நகரில் 99 சதவீத பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டு விட்டன. நகர் முழுவதும் உள்ள பங்குகளில் ஸ்டாக் இல்லை என்ற போர்டை தொங்க விட்டு விட்டுப் போய் விட்டனர்.
இதனால் பெட்ரோல், டீசல் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். புறநகர்ப் பகுதிகளிலும் அதே நிலைதான் காணப்படுகிறது.
இதே நிலைதான் தமிழகத்தின் பிற பகுதிகளிலும். முக்கிய நகரங்கள் அனைத்திலும் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் மக்கள் மறுபடியும் அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
பால்-தண்ணீர் லாரிகளும் ஓடாதாம்:
இந்த நிலையில், தங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் நாளை இரவு முதல் பால், குடிநீர் லாரிகளையும் ஓட்ட மாட்டோம் என லாரி உரிமையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து அகில இந்திய மோட்டார் டிரான்ஸ் போர்ட் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுகுமார் கூறுகையில், 4 நாட்களாக லாரி அதிபர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் மத்திய அரசு எங்களை கண்டு கொள்ளவில்லை.
ஏற்கனவே காஸ் சிலிண்டர், ரேசன் பொருட்கள் பருப்பு, முட்டை, மஞ்சள், இரும்பு தளவாட பொருட்கள், நிலக்கரி போன்றவை கொண்டு செல்லபடாமல் தேங்கி கிடக்கின்றன.
இந்த நிலையில் பெட்ரோல், டீசல் லாரிகளும் இயங்காமல் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் வாகன போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிக்கும் நிலை உருவாகி உள்ளது. ஆனாலும் மத்திய அரசு அதிகாரிகள் இதுவரை லாரி அதிபர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த முன் வரவில்லை.
ரயில்வே பிரச்சினை என்றால் ரெயில்வே அமைச்சர் பேசுகிறார். சத்யம் கம்ப்யூட்டர் பிரச்சினை என்றாலும் அமைச்சர்கள் பேசுகிறார்கள். ஆனால் லாரி அதிபர்கள் ஸ்டிரைக் பற்றி மத்திய தரை வழி போக்குவரத்து துறை அமைச்சர் இதுவரை பேசாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
லாரி அதிபர்கள் எல்லோரும் பேச்சுவார்த்தைக்கு டெல்லியில் காத்து இருக் கிறோம். ஆனால் தரைவழி போக்குவரத்து அதிகாரிகள் சென்னைக்கு வந்து விட்டனர். இது எங்களை உதாசீனப்படுத்துவதாக உள்ளது.
லாரி அதிபர்கள் ஒவ்வொருவரும் வருடத்திற்கு ரூ.2 லட்சம் அரசுக்கு டோல் வரி கட்டுகிறார்கள்.
டெல்லியில் எஸ்மா சட்டத்தை நடை முறைபடுத்தி லாரி அதிபர்களை மிரட்டுகிறார்கள். ஆனாலும் நாங்கள் பயப்படவில்லை.
டெல்லி, மும்பையில் 5 ஆயிரம் பெர்மிட்களை லாரி அதிபர்கள் சரண்டர் செய்து விட்டனர்.
பெர்மிட்களை சரண்டர் செய்ய தயார்:
தமிழ்நாட்டிலும் பெர்மிட்களை சரண்டர் செய்ய தயாராக இருக்கிறோம்.
நாளைக்குள் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு முன் வரவேண்டும் இல்லை என்றால் அத்தியாவசிய பொருட்களான பால், குடி தண்ணீர் ஏற்றிச் செல்லும் லாரிகளும் நாளை இரவு முதல் ஓடாது என்றார் அவர்.
பால், குடிநீர் லாரிகளும் ஓடாவிட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும்.












Click it and Unblock the Notifications