நாங்க வந்துட்டோம், ஆனால் திமுகவினர்..-ஜெ

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
நாளை திருமங்கலம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்காளர் அல்லாதவர்கள் நேற்று மாலை தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்பது தேர்தல் விதி. இதன்படி அதிமுக கூட்டணியைச் சேர்ந்த அனைவரும் நேற்று மாலை 5 மணிக்கே திருமங்கலம் தொகுதியை விட்டு வெளியேறிவிட்டனர்.
ஆனால் தேர்தல் விதிமுறையை மீறி திமுகவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர், திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தனியாருக்கு சொந்தமான வீடுகளிலும் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் இன்னும் தங்கி இருப்பதாகவும்,வாக்காளர்களை மிரட்டும் வகையில்,தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் வீதி உலா வந்துகொண்டிருப்பதாகவும் எனக்கு செய்திகள் வருகின்றன.
எனவே மக்கள் அச்சமின்றி தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக வாக்காளர் அல்லாத அனைவரையும் திருமங்கலம் தொகுதியை விட்டு உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தையும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியையும் கேட்டுக் கொள்வதோடு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஜெ. மன்னிப்பு கேட்க கோரி வக்கீல் நோட்டீஸ்:
இந் நிலையில் பிரசாரத்தின்போது, போலீசாரை அவதூறாகப் பேசிய ஜெயலலிதா மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால் வழக்கு தொடரப்படும் என்று கூறி வழக்கறிஞர் சுப.சீதாராமன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீசில், ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மற்றும் காவல்துறை குடும்பத்தினர் நலப் பேரமைப்பின் பொது செயலாளருமாகிய எம்.பி.செங்குட்டுவன் தகவலின் பேரில் தங்களுக்கு அனுப்பப்படும் சட்டப்பூர்வமான நோட்டீஸ் இது.
தாங்கள் கடந்த 3, 4ம் தேதிகளில் பொதுக் கூட்டங்களிலும், 5,6ம் தேதிகளில் நிருபர்களை சந்தித்தபோதும் பொது மக்கள் மத்தியில் காவல்துறைக்கு அவதூறு ஏற்படும் வகையில் பேசி இருக்கிறீர்கள். இது ஜெயா டி.வி.யில் மீண்டும், மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பத்திரிகைகளிலும் வெளியாகி உள்ளது. இதைப் படித்த பொதுமக்கள் மத்தியில் காவல்துறையின் மதிப்பும், மரியாதையும் குறைந்துள்ளது.
தங்களது அவதூறான பேச்சால், சட்டப்பூர்வமாக பணியாற்ற வேண்டிய காவலர்கள் நிம்மதியற்ற சூழ்நிலையில் அச்ச உணர்வோடு பணியாற்ற வேண்டிய சூழ்நிலையும், மனரீதியான தளர்ச்சியும், மன உளைச்சலும் அடைந்து எந்நேரமும் தமக்கு இடையூறுகள், இன்னல்கள் ஏற்படக்கூடும் என்கிற பய உணர்வும் ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளீர்கள்.
தங்களுடைய பேச்சு காவல்துறையை முடக்கச் செய்யும் பேச்சாகும். தங்களது அவதூறு பேச்சு அரசியல் சட்டப்பிரிவுகள் 124 (ஏ) 500-ன் கீழ் சட்டப்படி குற்றமாகும்.
இந்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 7 நாட்களில் நீங்கள் திருமங்கலத்தில் பேசிய அவதூறு பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பொது மன்னிப்பு கேட்டு அனைத்து பத்திரிகையிலும் செய்தியாக வெளியிட வேண்டும்.
தவறும்பட்சத்தில் தங்கள் மீது உரிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடர நேரிடும் என அறிவுறுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications