திருமங்கலத்தில் நாளை வாக்குப் பதிவு
திருமங்கலம்: திருமங்கலத்தில் நாளை வாக்குப் பதிவு நடப்பதையொட்டி இந்த தொகுதிக்குள் வெளி மாவட்டத்தில் இருந்து வரும் 15 பாதைகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனைகள் நடந்து வருகின்றன.
இங்கு நாளை காலை 7 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடையும். வாக்குச் சாவடிக்கு 100 மீட்டர் தூரத்துக்கு அப்பால் தான் அரசியல் கட்சியினர் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து வாக்குச் சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். தொகுதி முழுவதும் துணை ராணுவத்தினர், தேர்தல் அதிகாரிகள் வாகனங்களில் ரோந்து வருவர்.
மொத்தம் 500 துணை ராணுவத்தினரும், 5,000 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தத் தொகுதியின் ஓட்டுகள் மதுரை மருத்துவக் கல்லூரியில் எண்ணப்படவுள்ளன.
நாளை பொது விடுமுறை:
இடைத் தேர்தலை முன்னிட்டு திருமங்கலம் தொகுதிக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தொகுதியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மூடப்படும்.
'மப்டி'யில் திரியும் 'கரைகள்':
பல கட்சியைச் சேர்ந்தவர்கள் முக்கிய தலைவர்கள் பலர் தொகுதிக்கு உட்பட்ட பல கிராமங்களில் உள்ள வீடுகளில் கூட்டம் கூட்டமாக தங்கியுள்ளனர்.
ஆனால், வாக்குப்பதிவை முன்னிட்டு வெளியூர் பிரமுகர்கள் மற்றும் வாக்காளர்கள் அல்லாதவர்களை தொகுதியில் இருந்து காவல்துறை வெளியேற்றி வருகிறது.
இந்த கெடுபிடியால் பல அரசியல் கட்சியினர் வழக்கமாக அணியும் கரை வேட்டி மற்றும் வெள்ளைச் சட்டையை விட்டு விட்டு உள்ளூர்வாசிகளைப் போல லுங்கி, சாதாரண சட்டையுடன் வலம் வருகின்றனர்.
பஸ்கள் பாதியில் நிறுத்தம்-மக்கள் அவதி:
இதற்கிடையே திருமங்கலம் செல்லும் பஸ்கள் பாதியில் நிறுத்தப்பட்டதால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தேர்தலையொட்டி பஸ்கள் நகருக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து திருமங்கலம் நகரத்திற்கு வரும் பஸ்கள் மறவன்குளம் என்ற இடத்திலே நிறுத்தப்படுகின்றன.
இதனால் மதுரையில் இருந்து திருமங்கலம் வருபவர்களும், திருமங்கலம் மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து மதுரை செல்பவர்களும் மறவன் குளம் வரையே பயணம் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications