திருமங்கலம்-திருமாவுக்கு தடை போட்ட திமுக!
திருமங்கலம்: திருமங்கலத்தில் நடந்த இடைத தேர்தல் பிரச்சாரத்தில் திமுக கூட்டணியின் மிக முக்கிய தலைவரான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலை காட்டவே இல்லை.
திமுக வேட்பாளர் லதா அதியமானை ஆதரித்து கூட்டணிக் கட்சியான காங்கிரஸைச் சேர்ந்த தங்கபாலு, ஜி.கே. வாசன், போன்றவர்கள் கடைசி நேரத்திலாவது வந்து பிரச்சாரம் செய்தனர்.
ஆனால், திருமாவளன் வரவேயில்லை. முதல்வர் தலைமையில் நடந்த பொது கூட்டத்திலும் கூட அவர் கலந்து கொள்ளவில்லை.
விடுதலைப் புலிகள் விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே மன வருத்தம் உள்ள நிலையில் திருமாவை திமுக தலைமையே ஒதுங்கி இருக்குமாறு சொல்லிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அவர் வந்தால் காங்கிரஸ் தலைவர்கள் பிரச்சாரம் செய்வதை மறு பரிசீலனை செய்வார்கள் என்று தெரிய வந்ததால் அந்த சங்கடத்தை தவிர்க்க திருமாவளவனுடன் திமுக பேசிவிட்டதாகத் தெரிகிறது.
இதனால் தான் திமுகவுக்கு வாக்களிக்குமாறு ஒரு அறிக்கை விட்டதோடு சைலண்ட் ஆகிவிட்டார் திருமாவளவன்.
'நாங்க எம்புட்டு டீசண்டு'... ஸ்டாலின்:
இதற்கிடையே நேற்று நடந்த கடைசிகட்ட பிரசாரத்தின் போது அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
திருமங்கலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் கருணாநிதி அரசியல் நாகரீகத்தோடு, எவ்வளவு பண்பாட்டுடன் பேசினார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
ஆனால் ஜெயலலிதா எவ்வளவு கீழ்த்தரமாக பேச முடியுமோ, அவ்வளவு கீழ்த்தரமாக, அரசியல் நாகரீகமற்ற முறையில் பேசியுள்ளார். அவரை போன்று நாங்களும் பேசி எங்களது நாகரீகத்தை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை.
திருமங்கலத்தில் உள்ள 190 பூத்களிலும் வாக்குப் பதிவு எந்திரங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும் திமுகவுக்குத்தான் அந்த ஓட்டு விழும் என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். உண்மையிலேயே உங்களது எல்லா ஓட்டுக்களும் உதயசூரியனுக்குத்தான் விழும் என்பது அனைவருக்கும் தெரியும் என்றார்
இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஸ்டாலினுடன் தேர்தல் பணிக்குழு தலைவர் மு.க.அழகிரி, எம்பி தயாநிதி மாறன் ஆகியோரும் உடன் சென்றனர். பிரசாரத்தை அழகிரி முடித்து வைத்தார்.












Click it and Unblock the Notifications