சத்யம் சி.எப்.ஓ. தற்கொலை முயற்சி!
சத்யம் நிறுவனத் தலைவர் ராமலிங்க ராஜூவின் மோசடிகளுக்கு உடந்தையாக இருந்தவர் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர் சீனிவாஸ் வாட்லாமணி. அனைத்து மோசடிகளுக்கும் மூளையாக இருந்தவர் இவரே என்கிறார்கள்.
ராஜுவைத் தொடர்ந்து இவரும் தனது ராஜினாமாவை சமர்ப்பிக்க, அதை நாளை நடக்கும் இயக்குநர் குழுக் கூட்டத்தில் வைத்து விவாதித்து முடிவு செய்யப்படும் என தற்காலிக தலைமை நிர்வாகி ராம் மைனாம்பதி தெரிவித்திருந்தார்.
ராமலிங்க ராஜூ செபிக்கு எழுதிய கடிதத்தில் மோசடிகளில் தொடர்பில்லாதவர்கள் என சிலரது பெயர்களைக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பட்டியலில் சீனிவாஸ் பெயரில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனது மல்காஜ்கிரி வீட்டை விட்டு இரு தினங்களுக்கு முன்பே வெளியேறிய சீனிவாஸ், அமீர்பேட்டில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தாராம். இன்று காலை திடீரென்று அவர் தற்கொலை முயர்சியில் ஈடுபட்டதாகவும் உறவினர் வந்து காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த மேல் விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.