பாக். மீது இஸ்ரேல் பாணி தாக்குதல் இல்லை-பிரணாப்
டெல்லி: இஸ்ரேல் செய்வது போன்று பாகிஸ்தான் மீது இந்தியா நடவடிக்கை எடுக்காது. இஸ்ரேல் விவகாரத்தையும், இந்தியாவையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது என்று மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரணாப் முகர்ஜி அளித்துள்ள பேட்டியில், இஸ்ரேல் பாணி தாக்குதலை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். அதற்கும், இந்தியாவின் நிலைக்கும் சம்பந்தம் இல்லை. அது வேறு, இது வேறு.
இருப்பினும் பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு முடிவு கட்டுமா, இந்தியாவின் கோரி்க்கையை அது நிறைவேற்றுமா என்பதைப் பொறுத்து எதிர்கால நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும்.
இஸ்ரேல் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்துள்ளது. அதேபோல பாகிஸ்தான் நிலப்பகுதியை ஆக்கிரமிக்கும் எண்ணம் ஒருபோதும் இந்தியாவிடம் இருந்ததில்லை. அப்படி இருக்கையில் இஸ்ரேலைப் போன்று இந்தியாவும் தாக்குதல் நடத்தும் என எப்படி எதிர்பார்க்கலாம்?
அனைத்து வாய்ப்புகளும் இந்தியாவின் பரிசீலனையில் உள்ளன. அதேசமயம் ஆப்ஷன் ஏ, ஆப்ஷன் பி என பிரித்துக் கூற முடியாது. அனைத்து வாய்ப்புகளும் நம் முன் உள்ளன. அவ்வளவுதான் கூற முடியும்.
மும்பைத் தீவிரவாத தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை பாகிஸ்தானிடம் வழங்கியுள்ளோம். அதற்கேற்ப அது செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
பாகிஸ்தான் நம்மிடம் என்ன கேட்டதோ அதை நாம் அவர்களுக்கு வழங்கியுள்ளோம். இனி அதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒருவேளை அவர்கள் உரிய முறையில் செயல்படாவிட்டால் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை வருங்காலம் தீர்மானிக்கும் என்றார் பிரணாப்.