மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தேசிய பாதுகாப்பு சட்டம்
டெல்லி: கைது செய்யப்பட்ட அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்துள்ளது. அனைவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற மறுத்ததால் லாரி ஸ்டிரைக்கை நடத்தி வரும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு கைது செய்யப்பட்டனர்.
தலைவர் சரண் சிங் லோகரா, செயலாளர் வேணுகோபால், முன்னாள் தலைவர் ஓ.பி.அகர்வால், செயற்குழு உறுப்பினர்களான சுகுமார், ஹரி கோயல், சுனில் அத்ரி ஆகியோர் எஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
6 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. பின்னர் அனைவரும் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 24ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்ட 6 பேரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.