மும்பை லீலா ஹோட்டலுக்கு தீவிரவாதிகள் மிரட்டல்
மும்பை: மும்பை சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள ஹோட்டல் லீலாவுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இதுதொடர்பாக இரு இ மெயில்கள் லீலா ஹோட்டல் நிர்வாகத்திற்கு வந்துள்ளது. ஹோட்டலை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக அதில் மிரட்டப்பட்டுள்ளதாக போலீஸார் இன்று தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் இந்த மெயில்கள் வந்துள்ளன. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் ஹோட்டல் வளாகம் முழுவதையும் தீவிரமாக சோதனையிட்டனர். ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை.
எனக்கு 10 லட்சம் டாலர் பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் குண்டு வைப்பேன் என மெயில் அனுப்பிய நபர் தெரிவித்துள்ளதாக துணை போலீஸ் கமிஷனர் நிஸார் தம்போலி தெரிவித்தார்.
இது வெற்று மிரட்டலாக இருக்கும் என போலீஸார் சந்தேகப்பட்டாலும் கூட, சமீபத்திய தீவிரவாதத் தாக்குதல் அனுபவத்தால், ஹோட்டலுக்கு பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.