திமுகவுக்கு அதிகரித்த வாக்குகள் - அதிமுகவுக்கு படு தோல்வி - தேமுதிக டெபாசிட் இழந்தது
சென்னை: திருமங்கலத்தில் திமுகவுக்கு கடந்த தேர்தலை விட இந்த முறை கூடுதலான வாக்குகள் கிடைத்துள்ளன. அதேசமயம், அதிமுகவுக்கு வாக்குகள் குறைந்துள்ளன. தேமுதிகவுக்கு டெபாசிட் இழந்துள்ளது. புதுக் கட்சியான சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 1000 ஓட்டுக்களைக் கூட வாங்க முடியாமல் திணறிப் போய் விட்டது.
திருமங்கலம் தொகுதிக்கு கடந்த பொதுத் தேர்தலின்போது அதிமுக அணியில் இடம் பெற்றிருந்த மதிமுக வேட்பாளர் வீர. இளவரசன் 44 ஆயிரத்து 477 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
திமுக வேட்பாளர் வேலுச்சாமிக்கு 40 ஆயிரத்து 923 வாக்குகள் கிடைத்தன. அதாவது மயிரிழையில்தான் தோல்வியைத் தழுவியிருந்தார் வேலுச்சாமி.
தேமுதிக வேட்பாளர் தனப்பாண்டியன் 19 ஆயிரத்து 294 வாக்குகளைப் பெற்று அனைவரையும் வியக்க வைத்தார்.
ஆனால் இடைத் தேர்தலி்ல் நிலைமை தலைகீழாகியுள்ளது. அதிமுக ஆதரவுடன் போட்டியிட்டு மதிமுக வென்ற தொகுதியில், இந்த முறை அதிமுகவே நேரடியாக போட்டியிட்டது. ஆனால் அப்படி இருந்தும் கடந்த முறை கிடைத்த வாக்குகளை விட இந்த முறை குறைந்த வாக்குகளையே அதிமுக வேட்பாளர் முத்துராமலிங்கம் பெற்றுள்ளார்.
ஆனால் திமுகவுக்கோ கடந்த முறையை விட இந்த முறை, 38 ஆயிரத்து 499 வாக்குகள் கூடுதலாக கிடைத்துள்ளன. இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும், தேமுதிகவுக்கு டெபாசிட் பறிபோயுள்ளது அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த முறை 19 ஆயிரத்து 294 வாக்குகளைப் பெற்ற அக்கட்சியின் வேட்பாளர் தனப்பாண்டியன், இந்த முறை 13 ஆயிரத்து 136 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.
புதிதாக களம் கண்டுள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கு 831 வாக்குகள் கிடைத்துள்ளன. ஆனால் இது அக்கட்சிக்கு முதல் சட்டசபைத் தேர்தல் என்பதால் இதை வைத்து அக்கட்சி குறித்து எதுவும் கணிக்க முடியாது.
திருமங்கலத்தில் கிடைத்துள்ள அமோக வெற்றி திமுக தரப்பில் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications