அதிமுக எம்.எல்.ஏ சாமி, 52 பேருக்கு ஜாமீன்
மதுரை: மேலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ சாமி உள்ளிட்ட 53 பேருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஜாமீன் வழங்கியது.
திருமங்கலம் தொகுதி தேர்தல் பிரசாரத்திற்கு வந்த நடிகர் ராமராஜனின் கார் உள்ளிட்ட அதிமுகவினரின் காரை திமுகவினர் தாக்கியது தொடர்பாக விசாரிக்க சாமி உள்ளிட்ட அதிமுகவினர் விரைந்தனர்.
அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார் அனைவரின் கார்களையும் சோதனையிட்டனர். இதுதொடர்பாக இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
அப்போது போலீஸாரின் வாகனங்களைத் தாக்கியதாகவும், அரசு ஊழியர்கள் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கூறி சாமி உள்ளிட்ட 53 பேர் கைது செய்யப்பட்டனர்.
அனைவரும் ஜாமீன் கோரி உள்ளூர் கோர்ட்டில் மனு செய்தனர். ஆனால் அங்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதையடுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சாமி உள்ளிட்டோர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை அனைவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.