மாப்பிள்ளை பிடிக்காததால் பெண் தற்கொலை: பெற்றோர், தங்கையும் அடுத்தடுத்து தற்கொலை
ஈரோடு: பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை பிடிக்காததால், ஈரோட்டைச் சேர்ந்த பெண் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதனால் வேதனையடைந்த அவரது பெற்றோரும், தங்கையும் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டனர்.
ஈரோடு டவுன் வளையக்கார வீதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (58). அவருடைய மனைவி செல்வி (48). இவர்களது மகன் திலீப் (29), மகள்கள் திவ்யா (25), ரம்யா (24).
கந்தசாமி நகை செய்யும் தொழில் செய்து வந்தார். திலீப், கடையில் வேலை பார்த்து வருகிறார். திவ்யா, ரம்யா இருவரும் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்தனர்.
சமீபத்தில், திவ்யாவுக்கு வெள்ளக்கோவிலை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் அந்த மாப்பிள்ளையை திவ்யாவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந் நிலையில் நேற்று பிற்பகலில் திவ்யா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வருத்தம் தாங்க முடியாமல் திவ்யாவின் பெற்றோரும் சகோதரி ரம்யாவும் நகைகளுக்கு மெருகேற்ற பயன்படும் திரவத்தை தண்ணீரில் கலந்து குடித்து மயங்கி விழுந்தனர்.
உடனடியாக அவர்கள் 3 பேரின் உடல்களை ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், மூவரும் பலியாயினர்.