முல்லைத் தீவில் ராணுவம் தாக்குதல்
கொழும்பு: முல்லைத் தீவில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலைத் தொடங்கியுள்ளன இலங்கை படைகள்.
ஹெலிகாப்டர் கன்ஷிப்கள், போர் விமானங்கள், முல்லைத்தீவில் உள்ள பல முக்கிய நிலைகளை குறி வைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் 19 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சிக்கு தெற்கே உள்ள இரணமடு என்ற இடத்தில் விடுதலைப் புலிகளின் இரு முக்கிய நிலைகளை குறி வைத்து வி்மானங்கள் குண்டு வீசித் தாக்கியுள்ளன.
இவை விடுதலைப் புலிகள் ஒன்று கூடி திட்டமிடும் இடங்கள் ஆகும். எம்.ஐ.- 24 ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானஹ்களைக் கொண்டு இரணமடு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே கிளிநொச்சி, ஆனையிரவு ஆகிய முக்கியப் பகுதிகளை ராணுவத்திடம் இழந்துள்ள விடுதலைப் புலிகள் தற்போது முல்லைத் தீவோடு சுருங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது முல்லைத் தீவையும் பிடிக்கும் நோக்கில் இலங்கைப் படைகள் தீவிரத் தாக்குதலை தொடுத்து வருகின்றன. இதனால் இப்பகுதியில் வசிக்கும் லட்சக்கணக்கான தமிழர்களின் கதி கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழ் எம்.பி. கோரிக்கை:
இதற்கிடையே, ஈழத் தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசின் செயலை தடுத்து நிறுத்த தமிழக அரசும், மத்திய அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் எம்.பி சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ முதல்வரையும், மத்திய அரசையும் நாங்கள் கேட்டுக் கொள்வது என்னவென்றால், எங்களைக் காப்பாற்றுங்கள். இனப்படுகொலையிலிருந்து தமிழ் இனத்தைக் காப்பாற்ற உதவுங்கள். போரை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுங்கள். இல்லாவிட்டால் அப்பாவித் தமிழர்கள் அநியாயமாக உயிரிழப்பார்கள். கண்டிப்பாக அவர்கள் உயிர் பிழைக்கும் வாய்ப்பே இல்லை. எனேவ சண்டையை நிறுத்தி விட்டு அமைதிப் பேச்சுக்கு வருமாறு இலங்கை அரசை இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும் என்றார்.