என்.ஐ.ஏ இயக்குநராக ராதா வினோத் ராஜு நியமனம்
அமெரிக்காவின் எப்.பி.ஐ போல, இந்தியாவில் புதிதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி உருவாக்கப்பட்டுள்ளது. தீவிரவாத குற்றங்களை இது விசாரிக்கும்.
இந்த ஏஜென்சியின் முதலாவது இயக்குநர் ஜெனரலாக ராதா வினோத் ராஜு நியமிக்கப்பட்டுள்ளார்.
59 வயதாகும் ராஜு, தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு டிஜிபியாக பணியாற்றி வருகிறார். 1975ம் ஆண்டு பேட்ஜ் ஐ.பி.எஸ்.அதிகாரி ஆவார்.
ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையின் ஊழல் கண்காணிப்புப் பிரிவுக்குத் தலைமை தாங்குகிறார்.
2010ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி வரை தேசிய புலனாய்வு ஏஜென்சியின் இயக்குநராக அவர் பணியாற்றுவார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ராஜீவ் கொலை வழக்கை விசாரித்தவர் ...
சிபிஐ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர் ராஜூ.
சிபிஐயில் இருந்தபோது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்தவர் ராஜு என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜூவின் பெயரை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து பிரதமர் தலைமையில் கூடிய அமைச்சரவையின் நியமனக் கமிட்டி கூடி ராஜுவின் நியமனத்தை உறுதி செய்தது.
இந்த ஆண்டு ஜூலை 31ம் தேதியுடன் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறவிருந்தார் ராஜு. இந்த நிலையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய புலனாய்வு ஏஜென்சியின் தலைவராகியுள்ளார்.