வெளியுறவுச் செயலாளர் மேனன் இன்று கொழும்பு பயணம்
இலங்கையில் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிக்கும் செயலை நிறுத்த வேண்டும், போர் நிறுத்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இதை இந்தியா இலங்கையிடம் உறுதியாக தெரிவிக்க வேண்டும். இதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு நேரில் அனுப்பி வலியுறுத்த வேண்டும் என கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதி முதல் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வதற்கான வழியைக் காணோம்.
இந்த நிலையில் வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் இன்று கொழும்பு செல்கிறார். அவர் இலங்கை அரசிடம் போர் நிறுத்ததத்தை வலியுறுத்துவார் எனக் கூறப்படுகிறது.
ஆனால் இலங்கை அரசு தனது தாக்குதலை நிறுத்தும் என்பதற்கான வாய்ப்புகளோ, அறிகுறிகளோ சுத்தமாக தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பிரபாகரனை உயிருடன் பிடிப்போம், பிடித்தால் தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரியுள்ள இந்தியாவின் கோரிக்கையைப் பரிசீலிப்போம் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
எனவே மேனன் தனது பயணத்தின்போது பிரபாகரன் குறித்தே முக்கியமாக விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.