இந்தியாவுக்கு இன்னும் ஒரு வாரத்தில் பதில்: பாக்.
இஸ்லாமாபாத்: மும்பைத் தாக்குதல் தொடர்பாக இந்தியா அளித்துள்ள ஆதாரங்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் பதிலளிக்கப்படும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தானின் தி நேஷனல் நாளிதழுக்கு பாகிஸ்தான் அரசு அதிகாரி ஒருவர் அளித்துள்ள பேட்டியில், மும்பைத் தாக்குதல் தொடர்பாக இந்தியா சில தகவல்களை அளித்துள்ளது. அதை ஆதாரம் என்று கூற முடியாது. அந்தத் தகவல்கள் போதுமானதாகவும் இல்லை.
இந்தியாவின் தகவல்களுக்கு பாகிஸ்தான் தரப்பில் அளிக்கப்பட வேண்டிய பதில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் வெளியுறவுத்துறை இந்த பதிலை அனுப்பி வைக்கும்.
அதற்கு முன்பு அதிபர் மற்றும் பிரதமரின் ஒப்புதல் பெறப்படும்.
மேலும், வலுவான ஆதாரங்களை வழங்க வேண்டும் எனவும் பாகிஸ்தான் தரப்பில் வலியுறுத்தப்படும். தற்போது இந்தியா வழங்கியுள்ள தகவல்களை ஆதாரமாக கருத முடியாத அளவுக்கு அவை உள்ளன என்றார் அவர்.