தொண்டர்கள் அமைதி காக்க திருமாவளவன் கோரிக்கை
சென்னை: காவல்துறையினர் என்னைக் கைது செய்தாலும் கூட விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கோரியுள்ளார்.
மறைமலை நகரில் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார் திருமாவளவன். இன்று உண்ணாவிரதத்தில் 3வது நாளாகும்.
இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் ஆங்காங்கு வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் உண்ணாவிரத மேடையில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசுகையில், தமிழக அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுக்கவோ, தர்மசங்கடத்தை ஏற்படுத்தவோ இந்த உண்ணாவிரதத்தை நான் நடத்தவில்லை. போர் நிறுத்தம் கோரி இந்திய அரசை நிர்ப்பந்திக்கவே இந்த போராட்டம்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக காந்திய வழியில் நான் உண்ணாவிரதம் மேற்கொண்டு உள்ளேன். இதை டெல்லியில் உள்ள காங்கிரசார் புரிந்து கொள்ள வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக முதல்வர் கலைஞர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார்.
ஆனாலும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. மாறாக சிங்கள அரசுக்கு துணை நிற்கிறது. இது தமிழ் இனத்தை இழிவுபடுத்தும் செயலாகும். மத்திய அரசை கெஞ்சி கேட்கிறேன். முல்லைத் தீவில் சாவின் விளிம்பில் பச்சிளம் குழந்தைகள் உள்பட 5 லட்சம் தமிழர்கள் உயிருக்காக போராடி கொண்டு இருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழத்தில் அமைதி திரும்ப வேண்டும்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மனது வைத்தால் நிச்சயம் போரை நிறுத்த முடியும். போரை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் வரை எனது போராட்டம் தொடரும்.
காவல்துறையினர் என்னைக் கைது செய்தாலும் கூட விடுதலைச் சிறுத்தைகள் கட்டுப்பாடு, கண்ணியம், சட்டம் ஒழுங்கை மீறாமல், அமைதி காக்க வேண்டும் என்றார்.
பாரதிராஜா-டி.ராஜேந்தர் வாழ்த்து:
இந்த நிலையில் உண்ணாவிரதம் இருந்து வரும் திருமாவளவனுக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இயக்குநர்கள் பாரதிராஜா, டி.ராஜேந்தர், மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், கவிஞர் காசி முத்துமாணிக்கம் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, எம்.ஜி.ஆர். கழக பொதுச் செயலாளர் ஆர்.எம். வீரப்பன் ஆகியோர் போன் மூலம் பேசினர்.
இயக்குநர் பாரதிராஜா திருமாவளவனை பாராட்டி பேசினார். அவர் கூறுகையில், இன உணர்வுடன் போராட்டத்தை திருமாவளவன் தொடங்கியிருப்பது உற்சாகத்தை அளிக்கிறது.
இனி தமிழர்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் திருமாவளவன் விட மாட்டான். சிதறிக் கிடக்கும் தமிழர்களை ஒன்று திரட்டும் முயற்சியில் திருமாவளவன் ஈடுபட வேண்டும்.
தமிழக அரசு என்ன செய்கிறது என்றே தெரியவில்லை. 2 நாட்களில் நல்ல முடிவு ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்தார் பாரதிராஜா.
சோர்வடைந்து வருகிறார் திருமா..
இதற்கிடையே 3வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் திருமாவளவன் உடல் பலகீனமாகி வருகிறது. டாக்டர்கள் குழு அவரை அவ்வப்போது பரிசோதனை செய்து வருகிறது.
அவருக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருப்ப்பதாகவும் சிறுநீரகங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து அவர் தண்ணீர் மட்டும் குடித்து வருகிறார்.
உண்ணாவிரத மேடை அருகில் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனனர்.
ஆற்காடு வீராசாமி வேண்டுகோள்
இந் நிலையில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இன்று திருமாவளவனை சந்தித்துப் பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய ஆற்காடு,
இலங்கை தமிழர் பிரச்சனையில் தீர்வு காண்பதற்காக முதல்வர் கருணாநிதி ஏற்கனவே பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளார். தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரிடம் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். எனவே நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
திருமாவளவன் தன்னிச்சையாக இந்த உண்ணா விரத முடிவை எடுத்துள்ளார். இப்போது திருமாவளவன் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு உண்ணா விரதத்தை கைவிட வேண்டும் என்று முதல்வர் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
கைதாவார்?:
இதற்கிடையே அவரது உடல் நிலை மோசனால் அவரை உடனே கைது செய்து மருத்துவமனையில் சேர்க்குமாறு போலீசாருக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications