திருமா உண்ணாவிரதம்: பல இடங்களில் வன்முறை, பஸ்கள் எரிப்பு-உடைப்பு

Subscribe to Oneindia Tamil

Thirumavalavan
மதுரை & கடலூர்: விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உண்ணாவிரதம் இருந்து வரும் நிலையில் தமிழகத்தி்ல் பல்வேறு மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி இன்று மூன்றாவது நாளாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தொடர் உண்ணாவிரம் இருந்து வருகிறார்.

சென்னை மறைமலை நகரில் உண்ணாவிரதம் இருந்து வரும் திருமாவளவனுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இருந்தும் ஆயிரக்கணக்கான விடுதலைச் சிறுத்தை தொண்டர்கள் அங்கு கூடியுள்ளனர்.

இதற்கிடையே மதுரை, கடலூர், சேலம், புதுச்சேரி, சென்னை ஆகிய மாவட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன.

மதுரை புறநகர் பகுதியில் 3 அரசு பஸ்களுக்கு தீ வைக்கப்பட்டது. மதுரையில் இருந்து மாத்தூர் சென்ற அரசு டவுன் பஸ் மீது குருத்தூர்பட்டி என்ற இடத்தில் ஒரு கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதில் பஸ் தீ பிடித்துக் கொண்டது. பயணிகள் உடனடியாக கீழே இறங்கியதால் உயிர் தப்பினர்.

அலங்காநல்லூரில் இருந்து அழகர்கோவில் சென்ற பஸ்சை சத்திரப்பட்டி அருகே சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தனர். இதில் பஸ் முழுவதும் எரிந்து நாசமாகிவிட்டது. கும்பல் பஸ்சை மறித்ததுமே பயணிகள் இறங்கிவிட்டதால் உயி்ர்ச் சேதம் ஏற்படவில்லை.

மதுரை மாவட்டம் மேலூரிலிருந்து அலங்காநல்லூருக்கு நேறஅறு இரவு டவுன் பஸ் போய்க்கொண்டிருந்தது. அப்போது, மாலப்பட்டி என்ற இடத்தில் பஸ்சை மறித்த ஒரு கோஷ்டியினர், பயணிகளை கட்டாயப்படுத்தி கீழே இறக்கினர். பின்னர் பஸ்சுக்கு தீவைத்து விட்டு தப்பினர்.

அதே போல மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு ஆங்காங்கே அரசு பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது. அண்ணாநகர், செல்லூர், ஒத்தக்கடை, கோரிப்பாளையம், செக்கானூரணி, கே.புளியங்குளம், அவனியாபுரம் ஆகிய இடங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட பஸ்கள் கல் வீச்சில் சேதமடைந்தன.

பழனியில் இருந்து மதுரைவந்த அரசு பஸ்சை சமயநல்லூர் ரயில்வே மேம்பாலம் அருகே நேற்றிரவு ஒரு கும்பல் வழிமறித்து கல்வீசி தாக்கியது. பின்னர் பயணிகளை இறங்கச் சொல்லிவிட்டு அதன் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் பஸ்சின் இருக்கைகள் எரிந்து நாசமாயின.

இதனால் மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு நேர பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. இன்று காலையில் மீண்டும் பஸ்கள் ஓடத் தொடங்கின.

இந் நிலையில் இன்று காலையும் சில இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றன. பண்ருட்டி மற்றும் கடலூர் பகுதிகளில் 18 பஸ்கள் கல் வீச்சில் சேதமடைந்தன.

காராமணி குப்பம் அருகே பஸ் மீது கல்வீசப்பட்டதில் அந்த பஸ்சில் பயணம் செய்த சுகுணா என்ற கர்ப்பிணி காயமடைந்தார்.

பண்ருட்டியில் இருந்து கடலூர் சென்ற அரசு டவுன் பஸ், கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே வந்தபோது ஒரு கும்பலால் தடுத்து நிறுத்தப்பட்டது.

பின்னர் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் பஸ்சின் பின் பக்க டயர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் பஸ் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதையடுத்து டிரைவரும், கண்டக்டரும் பயணிகளை கீழே இறங்குமாறு கூறி இறக்கி விட்னர்.

இதையடுத்து அக்கும்பல் பஸ் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியது.

இந்த சம்பவங்களையடுத்து கடலூரில் நேற்றிரவு 10 மணிக்கு மேல் பெருமபாலான பஸ்கள் நிறுத்தப்பட்டன. பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி பகுதிகளில் 2வது நாளாக பஸ்கள் ரத்து செய்யப்பட்டன.

கடலூர் மாவட்டத்தில் பஸ்கள் உடைப்பு தொடர்பாக 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதே போல மேட்டூரை அடுத்த கொளத்தூரில் நேற்று மாலை அரசு பஸ் உடைத்து நொறுக்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டம் அரூர் பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன. அரூரில் இருந்து ஊத்தங்கரை சென்ற தனியார் பஸ் மீது தீர்த்தமலை அருகே சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.

புதுவையில் இருந்து சென்னை புறப்பட்ட தமிழக அரசு பஸ்சை புதுவையில் அண்ணாசிலை அருகே சிலர் மறித்தனர். இதையடுத்து டிரைவர் மாற்றுப்பாதையில் பஸ்சை ஓட்டினார். அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் பஸ் மீது கல்வீசியும், இரும்பு பைப்களாலும் தாக்கி உடைத்தனர்.

சென்னையில் பெரியார் நகரில் இருந்து பிராட்வேக்கு நேற்று இரவு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. கேசவ பிள்ளை பூங்கா பகுதியில் நடராஜ் தியேட்டர் எதிரே பஸ்ஸை வழி மறித்து சிலர் தாக்கினர்.

இதில் பஸ்சின் பின் புற கண்ணாடி உடைந்தது.

இதற்கிடையே கடலூர் மாவட்ட பஸ்களில் ''உண்ணாவிரதம் இருக்கும் திருமாவளவனை காப்பாற்று'' என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+