ராஜூவுக்கு 'லை டிடெக்டர்' சோதனை?
ஹைதராபாத்: சத்யம் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூ 4 நாள் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டுள்ளார். அவரிடம் உண்மை கண்டறியும் 'லை டிடெக்டர்' சோதனை நடத்தப்படும் என்று தெரிகிறது.
கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள அவரிடம் செபி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரிடம் முழு அளவில் விசாரிக்க வேண்டுமானால் அவரை தங்களது காவலில் அனுப்ப வேண்டும் என ஆந்திர சிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த நீதிமன்றம் அவரை 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தது. இதையடுத்து இன்று அவரும், அவரது சகோதரரும் முன்னாள் நிர்வாக இயக்குனருமான ராம ராஜூ, முன்னாள் தலைமை நிதி அதிகாரி ஸ்ரீனிவாஸ் வட்லாமணி ஆகியோர் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டனர்.
அதே நேரத்தில், இவர்களை அவர்களது வழக்கறிஞர்கள் முன்னிலையில் தான் விசாரிக்க வேண்டும் என்றும் சிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணையின்போது தேவைப்பட்டால் மருத்துவ உதவிகளும் இவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லை டிடெக்டர் சோதனை:
இதற்கிடையே ராஜூவிடம் லை டிடெக்டர் சோதனை நடத்தவும் சிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. நிறுவனத்தின் ரூ. 7,000 கோடி பணம் எங்கே போனது என்பது குறித்து அவரை கிண்டியெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சத்யம் குழுவில் மேலும் 3 இயக்குனர்கள்:
இதற்கிடையே, சத்யம் நிறுவன போர்டை முற்றிலுமாக கலைத்துவிட்ட மத்திய அரசு கம்பெனிகள் விவகாரத்துறை சார்பாக முதலில் மூன்று இயக்குனர்களை நியமித்தது.
இப்போது மேலும் மூன்று இயக்குனர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.
நிறுவனத்துக்கு புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்து இந்த 6 பேர் கொண்ட புதிய போர்ட் முடிவு செய்யும்.












Click it and Unblock the Notifications