அத்வானி தான் பிரதமர்-மெளனம் கலைத்த மோடி
டெல்லி: பாஜக சார்பில் பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அத்வானிக்கு நிம்மதி தரும் வகையில், அந்தப் பதவிக்கு தான் போட்டியிடப் போவதில்லை என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.
அத்வானியை எதிர்த்து அந்தப் பதவிக்கு தானும் போட்டியிடப் போவதாக முன்னாள் துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத் கூறியுள்ளார். அவருக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தான் அடு்த்த பிரதமராக வேண்டும் என அனில் அம்பானி, சுனில் மிட்டல் உள்ளிட்ட தொழிலதிபர்கள் அகமதாபாத்தில் நடந்த கூட்டத்தி்ல் கருத்துத் தெரிவித்தனர்.
அந்த தொழிலதிபர்கள் கூட்டத்துக்கு தலைமை வகித்த மோடி, அதை மறுக்கவில்லை. இதனால், பாஜகவில் அத்வானிக்கு இன்னொரு போட்டியும் உருவாகிவிட்டது உறுதியானது.
இது குறித்து பாஜக தலைவர்கள், செய்தித் தொடர்பாளர்கள் கருத்து தெரிவிக்காமல் ஓடி ஒளிந்து வந்தனர். ஆனாலும் திரைமறைவில் அத்வானி தான் பிரதமர் வேட்பாளர் என்பதை மோடியின் வாயாலேயே அறிவிக்க வைக்க தீவிர முயற்சிகளில் பாஜக தலைவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
ஆனாலும் நான்கு நாட்களாக அமைதி காத்து அத்வானி தரப்புக்கு டென்சன் தந்த மோடி ஒரு வழியாக இப்போது வாய் திறந்துள்ளார்.
வதோதரா அருகே நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய மோடி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிப்பது உறுதி. அடுத்த பிரதமராக அத்வானி பதவி ஏற்பதும் உறுதி. பாஜக ஆட்சிக்கு வந்ததும் குஜராத் மாநிலத்தை போல் மத்திய அரசும், அனைத்து துறைகளிலும் சாதனை படைக்கும் என்றார்.
இதன்மூலம் பிரதமர் பதவி போட்டியில் தான் இல்லை என்பதை அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார். இதனால் அத்வானி தரப்புக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது.
சத்ருகன் தரும் தலைவலி:
இதற்கிடையே உத்தரப் பிரதேசத்தின் லக்னெள தொகுதியில் வாஜ்பாய் போட்டியிட மாட்டார் என்றும், பாஜக சார்பில் நான் தான் போட்டியிடுவேன் என்றும் அக் கட்சியின் எம்பியும் நடிகருமான சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார்.
ஆனால், சின்ஹாவை இம்முறை தேர்தலில் நிறுத்துவது குறித்தே அந்தக் கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்குள் தானாகவே முந்திக் கொண்டு வாஜ்பாயின் தொகுதியில் துண்டைப் போட்டுள்ளார் சின்ஹா. இதன்மூலம் பாஜகவில் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளார்.