கவுன்சிலர் மீது புகார்-பெண்ணை தாக்கிய இன்ஸ்பெக்டர்
தருமபுரி : கவுன்சிலர் மீது புகார் கொடுத்த பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் பொது இடத்தில் வைத்து தாக்கி அவமதித்த காவல்துறை ஆய்வாளர் மீது வழக்கு தொடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அண்ணல் நகரை சேர்ந்தவர் சொக்கன். இவரது மகள் கெளரி (24) ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். சொக்கனின் மனைவி துளசி (45) அரசு பள்ளியில் பணியாற்றி வருகிறார்.
இந் நிலையில் கெளரி குடும்பத்தாருக்கும் அவர் வீட்டுக்கு அருகில் வசிக்கும் கவுன்சிலர் கலையரசனுக்கும் இடையே கடந்த டிசம்பர் 2ம் தேதி சாக்கடை நீர் தேங்குவது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்தது. அப்போது கலையரசன் உள்ளிட்ட நான்கு பேர் கெளரியையும், அவரது பாட்டி தங்கம்மாளையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் தங்கம்மாள் மயங்கி விழுந்தார். சிகிச்சைக்காக அவர் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த டிசம்பர் 29 ம் தேதி தங்கம்மாள் இறந்தார். இவரது இறப்புக்கு காரணமான கலையரசன் உள்ளிட்ட நான்கு பேர் மீது மொரப்பூர் காவல் நிலையத்தில் கவுரியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
புகார் பதிவு செய்துவிட்டுத் திரும்பி கொண்டிருந்தபோது காவல்துறையினர் பேருந்து நிலையத்தில் வைத்து தன்னையும் தனது குடும்பத்தாரையும் தாக்கி அவமதித்ததாகக் கெளரி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் கலையரசன் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என்றும், கெளரி மீது பொய் வழக்கு பதிவு செய்த மொரப்பூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணன் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.