காஸாவில் இஸ்ரேல் போர் நிறுத்தம்
இஸ்ரேல் நடத்திய பயங்கர ஏவுகணை, விமானப் படை, டாங்கிப் படை தாக்குதலில் 1,200க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். காஸா பகுதியின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் நொறுக்கப்பட்டுவிட்டன.
மின்சாரம், குடிநீர் சப்ளை கட்டமைப்பையும் இஸ்ரேல் தகர்த்துவிட்டது. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பாலங்கள், சாலைகள் ஆகியவற்றையும் இஸ்ரேல் சிதறடித்துள்ளது.
காஸாவில் தாக்குதலை நிறுத்துமாறு உலக நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தினாலும் அதை அந்த நாடு காதில் போட்டுக் கொள்ளவில்லை. இஸ்ரேலை நெருக்குவது போல அமெரிக்கா வழக்கம் போல நடித்தாலும் தாக்குதலை நிறுத்த உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் போதி அளவுக்கு காஸாவை உருக்குலைத்துவிட்டதையடுத்து போர் நிறுத்தம் செய்வதாக இஸ்ரேல் பிரதமர் எகுட் ஓல்மார்ட் இன்று அறிவித்தார். அதே நேரத்தில் படைகள் தொடர்ந்து காஸா பகுதியில் நிலை கொண்டிருக்கும் என்றார்.
காஸாவில் இயங்கி வரும் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுவிட்டதால் தற்போது இந்தப் போரை நிறுத்திக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
ஆனால், ஸ்ரேல் மீதான தங்களது தாக்குதல் தொடரும் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது.