10,000 கோர்ட்டுகள் தேவை-தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன்
டெல்லி: கீழ் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள சுமார் மூன்றரை கோடி வழக்குகளுக்கு தீர்வு காண இன்னும் 10 ஆயிரம் கோர்ட்டுகள் தேவை என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள கீழ் கோர்ட்டுகள், ஐகோர்ட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட் ஆகியவற்றில் தினமும் அதிக அளவில் வழக்குகள் பதிவாகி வருகின்றன.
நிலுவையில் உள்ள வழக்குகளை முடிப்பதற்கு தற்போதுள்ள கோர்ட்களை மட்டும் பயன்படுத்தினால் அனைத்தையும் வழக்குகளுல் முடிவதற்கு இன்னும் 300 ஆண்டுகள் ஆகும்.
எனவே நிலுவையில் உள்ள வழக்குகளை முடிப்பதற்கு நாடு முழுவதும் இன்னும் 10 ஆயிரம் கோர்ட்டுகள் துவக்கப்பட வேண்டும் என்கிறார் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன். இது குறித்து அவர் அளித்த பேட்டியில்,
துணை கோர்ட்டுகளில் 3 கோடியே 58 லட்சம் , சுப்ரீம் கோர்ட்டில் 49 ஆயிரம், மாநில ஐகோர்ட்டுகளில் 36 லட்சம் வழக்குகள் என சுமார் 4 கோடி வழக்குகள் உள்ளன.
ஒரு மாநில ஐகோர்ட்டில் மட்டும் 8 லட்சம் வழக்குகள் தேங்கி நிற்பதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது.
வழக்குகளை விசாரிப்பதற்கு மொத்தம் 15 ஆயிரம் துணை கோர்ட்டுகள் உள்ளன. ஆனால் அவற்றில் 1,200 கோர்ட்டுகள் சரிவர இயங்குவதில்லை.
வழக்குகள் விரைவில் முடிக்காவிட்டால் சட்டம்-ஒழுங்குகில் பிரச்சினை ஏற்படும். எனவே, வழக்குகளை விரைவில் முடிப்பதற்கு இன்னும் 10 ஆயிரம் துணை கோர்ட்டுகள் தேவை.
கோர்ட்டுகளை நவீனமயமாக்க வேண்டும். கணினிமயமாக்குதல் மற்றும் உள்கட்டமைப்பு பணிகளை விரைவு படுத்த வேண்டும். பேச்சுவார்த்தை மூலமாகவே வழக்குகளை தீர்க்க நாம் முயற்சிக்க வேண்டும்.
இதை எளிதான கருத்தாக சொல்ல முடியாது. எனவே, அதற்கு தகுந்தவாறு அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். செக் மோசடி வழக்குகள், பெரிய பிரச்சினையாக இருக்கிறது.
சி.பி.ஐ. வழக்குகளும் அதிகரித்து வருகின்றன. அதற்கு போதுமான சி.பி.ஐ. கோர்ட்டுகள் இல்லை. 65 புதிய கோர்ட்டுகள் அமைக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். டெல்லியில் மட்டும் 4 சி.பி.ஐ. கோர்ட்டுகள் அமைய உள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு குடும்ப நல கோர்ட்டு இருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் உள்ள 465 மாவட்டங்களில் குடும்ப நல கோர்ட்டே இல்லை என்றார் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன்.












Click it and Unblock the Notifications