பஸ்சில் இடம் பிடிப்பதில் தகறாறு-இரண்டு கிராமங்கள் மோதல்!
விழுப்புரம் : உளுந்தூர்பேட்டை அருகே பஸ்சில் இடம் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் மூன்று வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உளுந்தூர் பேட்டையில் இருந்து வடமாம்பாக்கத்திற்கு தினமும் அரசு டவுன் பஸ் ஒன்று சென்று வருகிறது. அந்த பஸ்சில் இடம் பிடிப்பதில் எம்.குன்னத்தூர் மற்றும் கிளிபூர் கிராமத்தினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இரு கிராமத்தினரும் பஸ்சுக்குள்ளே மோதிக் கொண்டனர். இது தொடர்பாக அரசு பஸ் டிரைவர் சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் எம்.குன்னத்தூரைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரை கைது செய்தனர்.
இந்நிலையில், வடமாம்பாக்கத்தில் இருந்து குன்னத்தூரை நோக்கி அதே அரசு டவுன் பஸ் மீண்டும் வந்து கொண்டிருந்த போது, எம்.குன்னத்தூர் கிராம மக்கள் திடீரென அந்த பஸ்சை சிறை பிடித்தனர்.
குன்னத்தூரைச் சேர்ந்த தண்டபாணி, சண்முகம், சுந்தர்ராஜன் ஆகியோரின் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
புகாரின் பேரில் திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி வழக்கு பதிவு செய்து குன்னத்தூரைச் சேர்ந்த வாசு (43), தேசிங்குராஜா (22), ராஜா (52) ஆகியோரை கைது செய்தார். மேலும் சிலரை போலீசார் வீசி தேடி வருகின்றனர்.
இதையடுத்து இரண்டு கிராமங்களிலும் தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.