இலங்கைக்கு கடத்தவிருந்த வெடிமருந்து சிக்கியது
ராமநாதபுரம்: சாயல்குடி அருகே கன்னிராஜபுரத்தில் இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக கடற்கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து கேன் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக சுங்க இலாகாவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி நகருக்கு பக்கத்தில் கன்னிராஜபுரம் உள்ளது. இங்கு நேற்று காலை கடலில் பிளாஸ்டிக் கேன் ஒன்று மிதந்து கொண்டிருந்தது.
கடற்கரை மணலில் புதைக்கப்பட்ட பிளாஸ்டிக் கேன் கடல் அலையால் அடித்து செல்லப்பட்டு, கடலில் மிதந்துள்ளது. அதனை நேரில் பார்த்த அப்பகுதியினர் சந்தேகமடைந்து சுங்க இலாகாவுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் சுங்க இலாகா துணை ஆணையர் நடராஜ் ஆணையின் பேரில், சூப்பிரண்டுகள் வர்கீஸ் ஆண்டனி, சுடலைமுத்து, இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் குழுவினர் விரைந்து சென்று அந்த பிளாஸ்டிக் கேனை கைப்பற்றினர். பின்னர் அது ராமநாதபுரம் சுங்க இலாகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
கேனை திறந்து பார்த்த போது, இளஞ்சிவப்பு நிறத்தில் 295 பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த எக்ஸ்புளோசிவ் பேஸ்ட்' என பெயரிடப்பட்ட வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மிகவும் நாசம் விளைவிக்கக்கூடிய இந்த வெடிபொருள் பரிசோதனைக்காக தற்போது ஆய்வு கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடும் போர் நடைபெற்று வருவதால், இலங்கைக்கு வெடிபொருட்கள் கடத்தி செல்வதற்காக கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இவற்றை கொண்டு வந்தது யார்? இதில் தொடர்புடைய கடத்தல் பிரமுகர்கள் யார் என்பது குறித்து சுங்க இலாகாவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து கடலோர பகுதிகள் முழுவதும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இலங்கைக்கு கடத்தி செல்வதற்காக கன்னிராஜபுரம் கடற்கரையில் வெடிபொருள் கைப்பற்றப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.












Click it and Unblock the Notifications