தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்கும் 10 நாள் போராட்டம்: ராமதாஸ்
சென்னை: இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகமே ஸ்தம்பித்துப் போகும் அளவுக்கு 10 நாட்களுக்கு போராட்டம் நடத்தப்படும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
நேற்று மாலை பழச்சாறு கொடுத்து திருமாவளவனின் உண்ணாவிரதப் போராட்டத்தை டாக்டர் ராமதாஸ் முடித்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துக்கொள்ளும்படி, நான் நேற்று இதே மேடையில் கேட்டுக்கொண்டேன். அதற்கு திருமாவளவன், இன்று போய் நாளை வா என்று கூறிவிட்டார். ஆகையால் இன்று வந்து இருக்கிறேன். இன்று வெறுமனே போகமாட்டேன். பழச்சாறு கொடுத்து உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்து வைத்து விட்டுத்தான் செல்வேன்.
இலங்கை பிரச்சினை தொடர்பாக திருமாவளவன் மற்றும் அரசியல் கட்சிகளுடன் பேசி, அடுத்த கட்ட போராட்டம் தொடர்பாக நல்ல முடிவை எடுப்போம். அடுத்த கட்ட போராட்டம் என்பது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் நடக்க வேண்டும்.
உலகையே உலுக்க வேண்டும்:
இந்த போராட்டத்தால் தமிழகமே செயலிழக்க வேண்டும். பேருந்து, தொடருந்து எதுவும் ஓடக்கூடாது. மருந்து, பால் விநியோகம் மட்டுமே நடக்க வேண்டும். இந்த போராட்டம் உலகையே உலுக்க வேண்டும். இதை பார்த்துவிட்டு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்.
இது எனது தனிப்பட்ட முடிவு. திருமாவளவனுக்கு கூட நான் இப்படி ஒரு போராட்டத்தை கூறுவேன் என்பது தெரியாது. இதைவிட வேறு விதமான நல்ல போராட்டத்தை முதலமைச்சர் கூறினால், இதனை விட்டு விட்டு, முதல்வர் கூறும்படி போராட்டம் நடத்தலாம்.
முதல்வரை முன்நிறுத்தி, அவரது வழிகாட்டுதலின் பேரில் ஒரு நல்ல போராட்ட முடிவை எடுக்க வேண்டும்.
தமிழக முதல்வர், கோட்டை மற்றும் அறிவாலயத்தில் கூட்டம் போடாமல், பொதுவான இடத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் போட்டு, அதில் நாங்கள் முன்மொழிய, மற்ற கட்சிகள் வழி மொழிய செய்தால் சிறப்பாக இருக்கும்.
தமிழர்கள் கிள்ளுக்கீரையா ...
தமிழன் என்றால், மத்திய அரசு கிள்ளுக்கீரையாக நினைக்கிறது. விடுதலைச் சிறுத்தைகளும், பாட்டாளி மக்கள் கட்சியும் இல்லை என்றால், தமிழ்நாட்டில் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் சமாதி கட்டி இருப்பார்கள். இந்த கருத்துக்கு மறுப்பு யாராவது தெரிவித்தால், அவர்கள் சென்னையில் மேடை போட்டு சொல்லட்டும். அதில் நானும், திருமாவளவனும் பேசுவோம்.
இதே மறைமலை நகரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த மாதம் கறுப்புச் சட்டை அணிந்து 1,000 தீபங்கள் ஏற்றினோம். 7 கோடி தமிழர்களும் தங்கள் உணர்வை வெளிப்படுத்தி, இலங்கை தமிழர்களை காக்க வேண்டும் என்றார் அவர்.
23ம் தேதி ஆர்ப்பாட்டம்-தா.பாண்டியன்:
இந் நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் நிருபர்களிடம் பேசுகையில்,
முல்லை தீவில் முற்றுகையிடப்பட்டுள்ள தமிழர்களை கடல் வழியாகவும், வான்வழியாகவும், தரை வழியாகவும் இலங்கை ராணுவம் தாக்கி வருகிறது. இது பற்றி நம்முடைய வெளியுறவுச் செயலாளர் இலங்கை அரசிடம் ஏன் பேசவில்லை?.
இலங்கை அரசிடம் போர் நிறுத்தத்தை பற்றி பேச வேண்டாம் என்று சொல்லி தானே அவரை மத்திய அரசு அனுப்பி வைத்திருக்கிறது.
அப்படியென்றால் இந்திய அரசு, இந்திய தமிழ் மக்களின் கோரிக்கையை நிராகரித்து அவமானப்படுத்தி விட்டது என்று தானே அர்த்தம்.
மத்திய அரசின் இந்த கொடும் பாதக செயலை கண்டித்து தமிழகம் முழுவதும் 23ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.
திருமாவளவன் உண்ணாவிரதம் குறித்து ஜெயலலிதா தெரிவித்துள்ள கருத்துக்கள் அவருடைய சொந்த கருத்து. இலங்கை பிரச்சனை தொடர்பாக ஜெயலலிதாவை சந்தித்து நாங்கள் பேச இருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications