புலிகள் தாக்குதல்: 35 ராணுவத்தினர் பலி-கப்பல் மூழ்கடிப்பு
கொழும்பு: ராணுவத்தின் வசம் உள்ள கிளிநொச்சி மாவட்டம், நெத்தலியாறு பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய ஆவேசத் தாக்குதலில் 35 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 60க்கும் மேற்பட்டோர்க காயமடைந்தனர். இப்பகுதியில் ராணுவத்தின் முன்னேற்றம் தடுக்கப்பட்டுள்ளது.
ஆர்ட்டிலரி உள்ளிட்டவற்றின் துணையுடன் ராணுவம் நடத்திய கடும் தாக்குதலை விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்தினர். இரு தரப்புக்கும் இடையே நடந்த கடும் சண்டையின் இறுதியில் ராணுவத்தின் முன்னேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது.
மோதலில் 35 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றினர்.
இதேபோல புதுக்குடியிருப்பு பகுதியில் நடந்த கடும் சண்டைச் சம்பவங்களில் புலிகளுக்கு கடும் சேதம் ஏற்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பு விபத்துக்குள்ளான விமானப்படையின் விமானம் ஒன்றை ராணுவம் தற்போது கண்டுபிடித்துள்ளது. அது குட்டி விமானம் ஆகும்.
இரணமடு குளத்தின் கிழக்குப் பகுதியில், உள்ள விடுதலைப் புலிகளின் விமான ரன்வேக்கு அருகில் அந்த விமானத்தின் சேதமடைந்த பகுதி காணப்பட்டது.
கடற்படை கப்பல் மூழ்கடிப்பு-புலிகள்:
இதனிடையே இலங்கை கடற்படையின் ஒரு கப்பல் மூழ்கடிக்கப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு கடல் பகுதியில் நேற்று நள்ளிரவு நடத்திய தாக்குதலில் சூப்பர் துவோரா ரக போர்க் கப்பலை புலிகள் மூழ்கடித்ததாக தமிழ்நெட் செய்தி வெளியிட்டுள்ளது.
புலிகளின் 4 படகுகள் அழிப்பு:
இதற்கிடையே முல்லைத் தீவு அருகே விடுதலைப் புலிகளின் 4 படகுகள் அழிக்கப்பட்டதாக இலங்கை கடற்படை கூறியுள்ளது.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முல்லைத்தீவு கடலோரப் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான நான்கு படகுகள் தப்பிச் செல்ல முயன்றதாகவும், அதை இலங்கை கடற்படையின் போர்க் கப்பல் முறியடித்ததாகவும் நடுக்கடலில் நடைபெற்ற இந்த மோதலில் புலிகளின் 4 படகுகளும் அழிக்கப்பட்டதாக கூறியுள்ளது.
இந்த மோதலின் போது விடுதலைப் புலிகள் தற்கொலைப் படையினர் ஒரு படகை வெடிக்கச் செய்ததில் இலங்கை கடற்படையின் போர்க் கப்பல் ஒன்று சேதம் அடைந்தது.
இதனிடையே முல்லைத்தீவு அருகே உள்ள தர்மாபுரம் என்ற இடத்தில் பூமிக்கு அடியில் புலிகள் வைத்திருந்த 300 பேரல் எரிபொருளை ராணுவத்தினர் பறிமுதல் செய்திருப்பதாக இலங்கை ராணுவ இணையத் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications