வரி ஏய்ப்பு: ஜெ. மனு தள்ளுபடி-5 மாதங்களில் விசாரிக்க உத்தரவு!

மேலும் இந்த வழக்கிலிருந்தே தன்னை விடுவிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டது.
1993-94ம் ஆண்டுக்கான செல்வ வரியை செலுத்ததாக ஜெயலலிதாவுக்கு எதிராக வருமான வரித்துறை உதவி ஆணையாளர் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் 1997ம் ஆண்டு புகார் செய்தார். இது தொடர்பாக நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந் நிலையில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரி ஜெயலலிதா எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிமன்றம் கடந்த ஆண்டே தள்ளுபடி செய்துவிட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை புகார் அளித்தபோது அவர்கள் தரப்பில் உரிய ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை என்று கூறி, இந்த வழக்கையே ரத்து செய்ய வேண்டும் என்று மேலும் ஒரு மனுவை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்தார்.
இந்த இரு மனுக்களையும் நீதிபதி மோகன்ராம் விசாரித்து வந்தார்.
இதில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜெயலலிதாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் வருமான வரித்துறை புகார் கொடுத்தபோது அவர்கள் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த விவரங்களே போதுமானது என்றும், ஜெயலலிதா சொல்வது போல அதற்கான ஆவணங்களை அவர்கள் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
மேலும் இந்த வழக்கில் இருந்தே தன்னை விடுவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்த நீதிபதி, இந்த வழக்கை 5 மாத காலத்திற்குள் சாட்சிகளை விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை விரைவில் தொடங்கவுள்ளது.












Click it and Unblock the Notifications