காங்கிரசில் இணைகிறார் அசாருதீன்?-தேர்தலில் போட்டி!
ஹைதராபாத்: முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் அசாருதீன் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று தெரிகிறது.
இந்தத் தகவல்களை அவர் மறுத்தாலும் வரும் மக்களவைத் தேர்தலில் ஹைதராபாத் தொகுதியி்ல் அவர் போட்டியிடக் கூடும் என்று கூறப்படுகிறது.
கடந்த 2000ல் கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி அணியில் இடத்தை இழந்தார்.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறுகையில், காங்கிரசில் இணைந்தால் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்படும் என்றார்.
ஆந்திர காங்கிரஸ் தலைவர் வீரப்ப மொய்லி கூறுகையில், அசார் காங்கிரசில் சேர விருப்பம் தெரிவித்திருப்பதாக மூன்றாவது நபர் ஒருவர் எங்களிடம் தெரிவித்தார். ஆனால் அசார் இதுவரை என்னை வந்து சந்திக்கவில்லை. முடிவு எடுப்பது அவரது விருப்பம் என்றார்.
ஆனால், இந்தத் தகவல்களை அசார் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், இந்த கதைகளை உருவாக்குவது யார் என தெரியவில்லை. நான் காங்கிரசில் சேர்ந்தால் அதை முன்பே அனைவருக்கும் அறிவித்துவிட்டே சேருவேன் என்றார்.