ராஜஸ்தான்-பஞ்சாப் எல்லையில் தளபதி திடீர் ஆய்வு
டெல்லி: ராணுவ தளபதி தீபக் கபூர், ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உள்ள பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். படைகளின் ஆயத்த நிலையை அவர் நேரில் கண்டு ஆய்வு செய்துள்ளார்.
மும்பைத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ராணுவம் ஆயத்த நிலையில் இல்லை என்று நேற்று முன்தினம் செய்திகள் வெளியாகின. இதை பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி மறுத்திருந்தார். இந்த நிலையில் ராணுவ தளபதியின் திடீர் விஜயம் முக்கியத்துவம் பெறுகிறது.
இதுகுறித்து ராணுவ தலைமையக வட்டாரத்தில் கேட்கப்பட்டபோது, ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நடந்த பிரம்மோஸ் ஏவுகணை சோதனையின்போது ராணுவ தளபதி தீபக் கபூர் அங்கு இருந்தார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர் ராஜஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள பிகானீர், பதிந்தா பிரதேசங்களில் (இந்திய, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகள்) அவர் ஆய்வு மேற்கொண்டார்.
இப்பிராந்தியங்களில் ராணுவத்தின் ஆயத்த நிலை குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். எதிரிகளின் ஊடுறுவல் மற்றும் அத்துமீறல்களை சமாளிக்கும் வகையில் படையினர் உள்ளனரா என்பதையும் அவர் ஆய்வு செய்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்த கடற்படையும், விமானப்படையும் தயாராக உள்ளனவாம். ஆனால் ராணுவ தளபதி தீபக் கபூர் அதற்கு முரணாக கருத்து தெரிவித்துள்ளார்.
படையினரின் ஆயத்த நிலையில் சில இடைவெளிகள் உள்ளன. எனவே இந்த நிலையில் நாம் தாக்குதல் நடத்துவது உகந்ததாக இருக்காது என அவர் பாதுகாப்பு அமைச்சரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் அரசு என்ன உத்தரவிட்டாலும் அதை ஏற்று நடத்த ராணுவம் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications