'பாலு டேப்'-ஒப்படைக்க ஜெயா டிவிக்கு உத்தரவு
டெல்லி: 2007ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு பேசிய பேச்சு குறித்த ஒரிஜினல் டேப்களை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய் வேண்டும் என ஜெயா டிவி நிர்வாகத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி சென்னையில் திமுக கூட்டணி சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. இதில் கலந்து கொண்டு டி.ஆர்.பாலு பேசுகையில், உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பாலு பேசியதாக கூறி அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதையடுத்து ஜெயா டிவி செய்தியாளர்கள், கேமராமேனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் டைம்ஸ் நவ் டிவிக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் டைம்ஸ் நவ் டிவி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பாலுவின் பேச்சு அடங்கிய டேப் தங்கள் வசம் இல்லை என்று கூறினார். மேலும் ஜெயா டிவியின் வக்கீல், கால அவகாசம் கேட்டிருந்தார்.
கடந்த டிசம்பர் 10ம் தேதி இந்த வழக்கு நீதிபதிகள் அகர்வால், சிங்வி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, இரு டிவி நிறுவனங்களும் வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு மீண்டும் வந்தபோது ஜெயா டிவி நிறுவனம் பாலுவின் பேச்சு அடங்கிய ஒரிஜினல் டேப்களை 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதற்குப் பின்னர் 3 வாரங்களுக்குள் டி.ஆர்.பாலு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி மார்ச் 24ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.