ஒபாமாவின் புதிய குடியேற்ற கொள்கை-இந்தியர்களுக்கு லாபம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் புதிய குடியேற்றக் கொள்கை, இந்தியர்களுக்கு சாதகமாக அமையும் என கருதப்படுகிறது.
அமெரிக்காவில் சட்டபூர்வமாக குடியேற விரும்புவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒபாமா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் இந்தியர்களுக்குத்தான் அதிக பலன் கிடைக்கும் என கருதப்படுகிறது.
காரணம், அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக குடியேறுவோரில் இந்தியர்கள்தான் சமீப காலமாக அதிக அளவில் உள்ளனர் என்பதே.
புதிய அமெரிக்க அரசின் குடியேற்றக் கொள்கை வரைவுத் திட்டத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது. அதில், சட்டப்பூர்வமாக குடியேற விரும்புவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒபாமா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தற்போது உள்ள குடியேற்றக் கொள்கையில் உள்ள குளறுபடிகளைக் களைந்து, அதில் உள்ள அரசியலை நீக்கி, முழுமையான தீர்வைத் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
குடியேறிகளின் நாடு என்ற அமெரிக்காவின் பாரம்பரியத்தை சிதைக்காத வகையில் புதிய குடியேற்றக் கொள்கை அமையும்.
அதேபோல, சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களை வேலைக்கு அமர்த்துவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், உரிய ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக குடியேறியிருப்போர், அதற்குரிய அபராதத்தைக் கட்டவும், அமெரிக்க ஆங்கிலத்தை கற்கவும், பொறுப்பான அமெரிக்க குடிமக்களாக மாற முன்வந்தால், அவர்களை ஆதரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.