ரிலையன்ஸ் மூன்றாவது காலாண்டு லாபம் 56 சதவிகிதம் குறைவு!
மும்பை: மூன்றாவது காலாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாபம் பாதிக்கும் மேல் குறைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிரடி சரிவுதான் இந்த வீழ்ச்சிக்குக் காரணம் என்று ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை நிறுவனம் ரிலையன்ஸ். இந்த நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.
இதன்படி டிசம்பர் 31-ம் தேதியோடு முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் ரூ.3501 கோடியை வரிக்குப் பிந்தைய லாபமாக ஈட்டியுள்ளது ரிலையன்ஸ். இதுவே கடந்த ஆண்டு ரூ.8079 கோடியாக இருந்தது. கிட்டத்தட்ட 56.8 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஆனால் இந்த காலாண்டில் ரூ.4733 கோடிக்கு ரிலைன்ஸ் பெட்ரோலிய பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இது திரும்பத் திரும்ப கிடைக்கும் வருவாயல்ல.
எனவே இந்தத் தொகையை நிகர லாபத்துடன் சேர்க்காமல் கணக்கிட்டால், கடந்த வருட மூன்றாவது காலாண்டில் ரூ.3,882 கோடி லாபம் சம்பாதித்திருந்த ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், இந்த வருட மூன்றாவது காலாண்டில் ரூ.3,501 கோடி மட்டுமே லாபம் சம்பாதித்திருக்கிறது. அதன் மொத்த வரவு செலவும் 9.3 சதவீதம் குறைந்து ரூ.32,535 கோடியாகியிருக்கிறது.
அதேபோல நிறுவனத்தின் நிகர வருமானம் ரூ.34590 கோடியிலிருந்து ரூ.31563 கோடியாகக் குறைந்துள்ளது.
இந்த வருவைாய் மற்றும் லாப இழப்புக்குக் காரணம் கச்சா எண்ணெய் விலை 55 டாலரிருந்து 40 டாலராகக் குறைந்துள்ளது.
அதேபோல ரிலையன்ஸ் ரீபைனரிஸ் பிரிவில் ரூ.26154 கோடிக்கு பதில் ரூ.21740 கோடியாக உள்ளது.
பெட்ரோகெமிக்கல்ஸ் பிரிவிலும் இறங்குமுகம்தான் நிலவுகிறது. இந்தக் காலாண்டில் ரூ.12706 கோடியிலிருந்து ரூ.12623 கோடியாக குறைந்துள்ளது.
ரிலையன்ஸ் பங்கு வர்த்தகத்தில் இதனால் நிலையற்ற தன்மை நிலவுகிறது.