பேரம் பேசி ரூ. 10,000 லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது
திருத்தணி: திருத்தணியில் ரூ.10 ஆயிரம் லஞ்சப் பணத்தை பேரம் பேசி வாங்கிய பெண் பத்திரப்பதிவாளரை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கையும் களவுமாக பிடித்துக் கைது செய்தனர்.
சென்னை கே.கே.நகரை சேர்ந்த டாக்டர் ஆறுமுகம் திருத்தணி அருகேயுள்ள மத்தூர் கிராமத்தில் நிலம் வாங்கினார். தற்போது அந்த நிலங்களை பிளாட் போட்டு விற்று வருகிறார். இதற்கான பத்திரப்பதிவு திருத்தனி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்தது.
பத்திரப்பதிவு நடந்து பல மாதங்களுக்கு மேலாகியும் பத்திரபதிவாளர் மீனாட்சி ஆவணங்களைத் தராமல் இழுத்தடித்துள்ளார். நிலத்தை வாங்கியவர்கள் டாக்டர் ஆறுமுகத்திடம் முறையிட்டுள்ளனர்.
அப்போது பத்திரப்பதிவாளர் மீனாட்சி, ரூ.10 ஆயிரம் கொடுத்தால்தான், ஆவணங்களை தருவேன் என லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து டாக்டர் ஆறுமுகம் சென்னை லஞ்ச ஒழிப்பு இயக்குனர் ராமானுஜத்திடம் புகார் அளித்தார்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள இணை இயக்குனர் ஐ.ஜி. துக்கையாண்டி, சூப்பிரண்டு பவானீஸ்வரி ஆகியோர் மேற்பார்வையில், துணை சூப்பிரண்டு பொன்னுசாமி தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் உச்சப்பட்டி பரமசாமி, இம்மானுவேல் ஞானசேகரன், அசோகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டது.
இவர்களின் அறிவுறுத்தலின் பேரில் டாக்டர் ஆறுமுகம் நேற்று மாலை ரூ.10 ஆயிரம் லஞ்சத்தோடு திருத்தணி பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்றார்.
முதலில் ரூ. 8 ஆயிரம் தருவதாக கூறினார். ஒரு பைசா குறைந்தால் கூட வாங்கமாட்டேன் என பேரம் பேசிய மீனாட்சி, பின்னர் ரூ.10 ஆயிரத்தை கேட்டு வாங்கி தனது தனது கைப் பையில் வைத்துள்ளார்.
அப்போது மாறுவேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மீனாட்சியை கையும் களவுமாக பிடித்தனர். லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டது.