இந்தியா, கஸகஸ்தான் அணு ஒப்பந்தத்தில் கையெழுதது
டெல்லி: இந்தியாவும், கஸகஸ்தானும் அணு சக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட ஐந்து ஒப்பந்தங்களில் இன்று கையெழுத்திட்டன.
கஸகஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நசர்பயேவ் நான்கு நாள் பயணமாக டெல்லி வந்துள்ளார். குடியரசு தின விழாவில் அவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளார்.
இன்று அவரும், வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் சந்தித்துப் பேசினர். பின்னர் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் முன்னிலையில் இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
இதில் முக்கியமானது இரு நாடுகளுக்கும் இடையிலான சிவில் அணு சக்தி ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில், இந்திய அணு சக்தி கார்ப்பரேஷனும், கஸகஸ்தான் அணு சக்தி கழகமான கஸடோம்பிரோம் நிறுவனமும் கையெழுத்திட்டன.
இதுதவிர கைதிகள் பரிமாற்றம், உலக வர்த்தக கழகத்தில் கஸகஸ்தானை இணைக்க உதவுவது, இரு நாட்டு எண்ணெய் நிறுவனங்களான ஓஎன்ஜிசி மற்றும் கேஎம்ஜி இடையிலான ஒப்பந்தம் ஆகியவை மற்ற ஒப்பந்தங்கள்.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இருதய அறுவைச் சிகிச்சை நடைபெறுவதால் அவரது சார்பில் பிரணாப் முகர்ஜி கஸகஸ்தான் அதிபரை சந்தித்தார். மேலும், வழக்கமாக பேச்சுவார்த்தைகள் நடைபெறும் ஹைதராபாத் ஹவுஸுக்குப் பதில் ராஷ்டிரபதி பவனில் பேச்சுவார்த்தை நடந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications