தூத்துக்குடியில் வாந்தி, பேதிக்கு மேலும் ஒருவர் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடியில் பரவி வரும் வாந்தி, பேதிக்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார்.
தூத்துக்குடி முத்தையாபுரம், முள்ளக்காடு, கோவங்காடு, சவேரியர்புரம், பழைய காயல் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த பொதுமக்கள் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு கடந்த இருநாட்களாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.
இதில் ஏரல் அம்மாதோப்பு பகுதியை சேர்ந்த குணசெல்வம் என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில் நேற்று இரவு முதல் இன்று வரை தூத்துக்குடி மூனுசென்ட் அந்தோணியர்புரம், முத்தையாபுரம், முள்ளக்காடு பகுதிகளை சேர்ந்த மேலும் 50 பேர் வாந்திபேதியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை அருகேயுள்ள வடக்கு சிலுக்கன் பட்டியை சேர்ந்த ராஜ்குமார் மகன் ராஜாசெல்வம் என்ற குழந்தையும் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான்.
இந்த நிலையில் இன்று காலை இறால் கம்பெனியில் வேலை பார்த்து வந்த முனுசென்ட் அந்தோணியர்புரத்தை சேர்ந்த முருகன் என்பவர் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார். இவருடன் சேர்ந்து வாந்தி பேதிக்கு 2 பேர் பலியாகியுள்ளனர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இதுவரை 22 பெண்கள் உள்பட 41 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏரல் பகுதியில் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்ட 7 பேர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications