கோவையிலிருந்து தென் மாவட்டங்களில் 5 தீவிரவாதிகள் ஊடுறுவல்?
நெல்லை: கோவையில் இருந்து 5 தீவிரவாதிகள் தென் மாவட்டங்களுக்குள் காரில் ஆயுதங்களுடன் ஊடுருவி இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த சைனுதீன் என்ற தீவிரவாதியை ஆந்திரா போலீசார் ஐதராபாத்தில் கைது செய்தனர். கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள தீவிரவாத கும்பலுடனும் சைனுதீனுக்கு தொடர்பு உள்ளது.
இதையடுத்து கேரளா மற்றும் கர்நாடக போலீசார் ஐதராபாத் சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் தமிழகத்திலும் குண்டு வெடிப்பை நடத்த சைனுதீன் திட்டமிட்டு இருந்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து சைனுதீனை காவலில் எடுத்த போலீசார் அவரை பெங்களூரில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் குடியரசு தினத்தன்று நாசுவேலையில் ஈடுபட அவர் திட்டமிட்டு இருநததாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இதையடுத்து தமிழகத்தில் பாதுகாப்பை பலத்தப்படுத்த டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில் இன்று கோவையில் இருந்து கருப்பு நிற ஸ்கார்பியோ காரில் 5 தீவிரவாதிகள் துப்பாக்கி, வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் 10 லட்சம் பணத்துடன் தென்மாவட்டத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக உளவுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து தென்மண்டல ஜஜி சஞ்சீவ் குமார், மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள போலீசாரை உஷாராக இருக்கும்படியும், மேற்கண்ட கார் மாவட்டத்தில் நுழைந்தால் அதனை மடக்கி பிடிக்குமாறும், உத்தரவிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் போலீசார் வாகன சோதனை நடத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications