பிரதமருக்கு செயற்கை சுவாசம் அகற்றம் - நல்ல நினைவுடன் உள்ளார்
இன்னும் 10 நாட்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் தங்கி இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு டெல்லி அகில இந்திய விஞ்ஞான மருத்துவ கழகத்தில் (எய்ம்ஸ்) நேற்று இருத பைபாஸ் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
கிட்டத்தட்ட 12 மணி நேரம் இந்த அறுவைச் சிகிச்சை நடந்தது. இது வெற்றி பெற்றதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் பிரதமர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இன்னும் 2 நாட்களுக்கு இருப்பார்.
பின்னர் அவர் சிறப்பு வார்டுக்கு மாற்றப்படுவார். மருத்துவமனையில் பிரதமர் குறைந்தது 10 நாட்கள் தங்கியிருப்பார். அதன் பின்னர் அவர் டிஸ்சார்ஜ் செய்ய்படுவார். அவர் முழுமையாக குணமடைய குறைந்துத ஒன்றரை மாதங்களாகும் எனத் தெரிகிறது.
நல்ல நினைவுடன் உள்ளார்
இதற்கிடையே, பிரதமரின் உடல் நலம் நன்கு தேறி வருவதாக அறுவைச் சிகிச்சை செய்த டாக்டர் குழுவுக்கு தலைமை தாங்கிய டாக்டர் ரமாகாந்த் பான்டா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பிரதமர் நலமுடன் உள்ளார். நாங்கள் பேசுவதற்கு சரியாக பதிலளிக்கிறார். அவருக்கு வென்டிலேட்டர் (செயற்கை சுவாசம்) எடுக்கப்பட்டு விட்டது.
அவருக்கு நினைவு நன்றாக உள்ளது அவரை குடும்பத்தினர் சந்தித்தனர். டாக்டர்களுக்கு அவர்கள் பாராட்டையும் தெரிவித்தனர்.
பிரதமரின் உடல் நலம் குறித்து நாங்கள் பூரண திருப்தியுடன் உள்ளோம். செயற்கை சுவாசம் இல்லாமல் அவராகவே சுவாசிப்பது பெரிய முன்னேற்றமாகும் என்றார்.
5 இடங்களில் பைபாஸ்
பிரதமரின் இருதயத்தில் உள்ள தமனி குழாய்களில் மொத்தம் 5 இடங்களில் அடைப்பு இருந்தது. இதையடுத்து அந்த இடத்திற்குப் பதிலாக வேறு இடத்திலிருந்து ரத்தக் குழாய் எடுத்து பொருத்தப்பட்டுள்ளது.
இது பிரதமருக்கு 2வது பைபாஸ் அறுவைச் சிகிச்சை என்பதால் டாக்டர் பான்டா தலைமையிலான டாக்டர்கள் குழு மிக எச்சரிக்கையாக அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டது.
அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், பிரதமர் நலமுடன் இருக்கிறார். அறுவைச் சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது. தொடர் சிகிச்சை தொடங்கியுள்ளது என்றார்.
மன்மோகன் சிங்குக்கு சர்க்கரை வியாதியும் உள்ளதால் அவரது உடல் நிலையை டாக்டர்கள் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.