இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் - 2 மாணவர்கள் மயக்கம்
செங்கல்பட்டு: இலங்கையில் போரை நிறுத்த வேண்டும், தமிழர்களைக் காக்க வேண்டும் என்று கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் சட்ட மாணவர்களில் 2 பேர் இன்று மயக்கமடைந்தனர்.
இலங்கை அரசின் போர் நிறுத்தப்பட வேண்டும். தமிழர்கள் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் 14 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
நேற்று அவர்களை நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, கெளதமன் ஆகியோர் சந்தித்து போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் ஈழத்தில் போர் நிறுத்தப்படும் வரை தங்களது போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று நான்காவது நாளாக அவர்களது உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது. இன்று செம்புகுமார் மற்றும் ஆறுமுக நயினார் என்ற இரு மாணவர்கள் மயக்கமடைந்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து பாமகவினர், பொதுமக்கள் மற்றும் சக மாணவர்கள் இரு மாணவர்களையும், மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஏற்கனவே நான்கு மாணவர்கள் மயக்கமடைந்த நிலையில் தற்போது மேலும் இருவர் மயக்கமடைந்துள்ளதால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications