குடியரசு தின விழா - மெரீனா கடற்கரையில் சிறப்பான ஏற்பாடுகள்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் நாளை காலை குடியரசு தின விழாவை கோலாகலமாக நடத்த சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வழக்கம் போல் இந்த ஆண்டும் குடியரசு தினவிழா சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படும். சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலையில் காந்தி சிலை அருகே குடியரசு தின விழா நாளை காலை 8 மணிக்கு துவங்கும்.
காந்தி சிலை அருகே நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலாவை முதல்வர் கருணாநிதி வரவேற்கிறார். அதன்பிறகு இந்தியக் கடலோரக் காவல்படை கமாண்டர் (கிழக்கு மண்டலம்), காவல்துறை இயக்குனர், காவல்துறை கூடுதல் இயக்குனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மற்றும் சென்னை காவல்துறை கமிஷனர் ஆகியோரை முதல்வர் கருணாநிதி, ஆளுனருக்கு அறிமுகம் செய்து வைப்பார்.
பின்னர் ஆளுனர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்பார். அதைத் தொடர்ந்து ராணுவம், ரெயில்வே பாதுகாப்புப் படை, மத்திய தொழிற் பாதுகாப்புப் படை, சென்னை காவல் துறை ஆகியோரின் அணிவகுப்பு நடைபெறும்.
பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் அலங்கார வண்டிகள் அணிவகுத்துச் செல்லும். இவை அகில இந்திய வானொலி நிலையம் அருகிலிருந்து புறப்பட்டு சென்னைப் பல்கலைக் கழக அருகே நிறைவு பெறும்.
பின்னர் பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும், கிராமியக்கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
வீரதீர செயல் புரிந்தவர்களுக்கான அண்ணா பதக்கம், வீரதீர செயலைப் பாராட்டி மத்திய அரசு வழங்கும் ஜீவன் ரக்ஷா பதக்கம், மத நல்லிணத்துக்கான கோட்டை அமீர் விருது, கள்ளச் சாராய ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டதற்கான காந்தியடிகள் காவலர் பதக்கம் ஆகிய விருதுகளை முதல்வர் கருணாநிதி வழங்குவார்.
மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட கலெக்டர்கள் நாளை தேசியக் கொடியை ஏற்றி வைப்பார்கள். மாநகராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி மன்றங்கள், மற்றும் பேரூராட்சி மன்ற அலுவலகங்களிலும் தேசியக் கொடியை ஏற்றி வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.












Click it and Unblock the Notifications