விவாதிக்க தயாரா? - தங்கபாலுவுக்கு கள் இயக்கம் சவால்!
ஈரோடு: கள் இறக்கும் போராட்டத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, எங்களுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்று தமிழ் நாடுகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி சவால் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் தங்கபாலுக்கு தமிழ் நாடுகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ. நல்லசாமி ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், கள் இறக்கும் போராட்டத்தை எதிர்த்து சென்னையில் காங்கிரஸ் நடத்திய உண்ணாவிரதம் வேதனைக்குரியது.
பனை-தென்னை தொழிலாளர்கள் மீதும், விவசாயிகள் மீதும், கிராமங்கள் மீதும் தமிழக காங்கிரஸ் கொண்டுள்ள விரோதப் போக்கை காட்டுகிறது.
மது வகைகளை தயாரிக்கும் செல்வந்தர்கள், முக்கியஸ்தர்களை கவனிக்கின்றனர். ஆனால், விவசாயிகள் அவர்களை கவனிப்பதில்லை என்பதால் மதுவுக்கு அனுமதியும் கள்ளுக்கு தடையும் விதிக்கப்படுகிறது.
ஆந்திரம், புதுச்சேரி உள்பட காங்கிரஸ் ஆட்சி நடக்கும் மாநிலங்களில் கள்ளுக்கு தடை இல்லை.
அப்படி இருக்க தமிழகத்தில் மட்டும் கள் இறக்க தடை விதிக்க கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டது வருத்தம் அளிக்கின்றது.
கள்ளுக்கு விதித்துள்ள தடையை நீக்கக் கோருவது நியாயமில்லை என்று தாங்கள் நிரூபித்தால், எங்களது கோரிக்கையை கைவிட தயாராக உள்ளோம்.
இது தொடர்பாக தாங்கள் அறிவிக்கும் நாளில் நேருக்கு நேர் விவாதத்திற்கு வர நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications