தீவிரவாதத்தை வேரோடு களைய வேண்டும்: ஜனாதிபதி
டெல்லி: தீவிரவாதம் உலகை அச்சுறுத்தி வருகிறது. இதை வேரோடு களைய வேண்டும் என ஜனாதிபதி பிரதீபா பட்டீல், குடியரசு தின உரையில் கூறியுள்ளார்.
குடியரசு தின விழாவையொட்டி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நேற்று தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
குடியரசுத் தலைவரின் உரை ..
இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் ஒரு பொறுப்பான நாடாக உலக அமைதியை காக்க துணை புரிந்து வருகிறது. வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் தற்போது இந்தியா தீவிரவாதிகளின் வெறி பார்வையில் சிக்கியுள்ளது.
தீவிரவாதத்தின் மையப் புள்ளிக்கு அருகே நமது நாடு உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக இந்தியா தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல இடங்களில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் ஏராளமான அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர். தீவிரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் இணைந்து போராட வேண்டும்.
மும்பை நகரில் திட்டமிட்டு நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் இந்திய மக்களின் நம்பிக்கையை தகர்க்கும் நோக்கத்தில் அரங்கேற்றப்பட்டது. நமது நாடே இந்த சம்பவத்தால் கொதிப்படைந்தது. ஆனால் தீவிரவாதிகளின் எண்ணம் நிறைவேறவில்லை. ஒற்றுமை மிக்க, வலிமை மிக்க ஒருமித்த குரலால் தீவிரவாதத்தை கண்டித்தது நமது நாடு.
உலக அமைதிக்கு பெரும் ஊறாக விளங்குகிறது தீவிரவாதம். தீவிரவாதத்தை அழிப்பதே நமது முதல் கடமை. தீவிரவாதத்தை எந்த நாடும் தூண்டிவிட கூடாது. தங்கள் நாட்டுக்குள் தீவிரவாதிகள் உருவானால் அதற்கு அவர்கள் தான் பொறுப்பு. இதிலிருந்து யாரும் விலக முடியாது.
தீவிரவாதிகளின் எதிர்பார்ப்புக்கு மாறாக, மும்பை தாக்குதலுக்கு பின்னர் நடந்த காஷ்மீர் உள்ளிட்ட சட்டசபை தேர்தல்களில் ஏராளமான மக்கள் வாக்களித்தனர். ஜனநாயக அரசியலில் தமக்குள்ள நம்பிக்கையை உறுதி செய்தனர்.
அணு சக்திக்கான சர்வதேச நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா மேற்கொண்ட அணு சக்தி ஒப்பந்தங்கள் பேருதவி புரிந்தன. இந்தியா மீதான சர்வதேச சமுதாயத்தின் நம்பிக்கையை இது உறுதிப்படுத்தியுள்ளது.
நேர்மையற்ற முறையில் செயல்பட்ட சில நிறுவனங்கள் பங்குதாரர்களுக்கு இழப்பினை ஏற்படுத்தி உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது என்பது தொடர்பாக தெளிவான வரைமுறைகள் வகுக்க வேண்டும். உலக பொருளாதார சீர்க்கேடு நம்மையும் பாதித்துள்ளது. இதை சமாளித்து தொடர்ந்து வளர்ச்சி பாதையி்ல் செல்ல வேண்டும்.
இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற வகையில் இந்திய பெண்கள் மீது எனக்கு அதிக அனுதாபம் உண்டு. அவர்களின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவர்களை சமமாக மதித்து, உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும். மற்றவர்களுக்கு நிகரான கெளரவத்துடனும், மரியாதையுடனும் வாழ அவர்களுக்கு உரிமை உண்டு.
வசதி படைத்த சிலரின் வளமைக்காக மற்றவர்கள் பாதிக்கப்படுவதை நாம் அனுமதிக்கக் கூடாது.
விளையாட்டு வீரர்களுக்கு அதிக வசதிகளையும், ஊக்கத்தையும் அளிப்பது அவசியம். சந்திரயான்-1 ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்பட வைத்துள்ளது என்றார் பிரதிபா பட்டீல்.












Click it and Unblock the Notifications