சென்னையில் ராஜுவின் தம்பி பதுங்கலா?
ஹைதராபாத்: 'சத்யம் மோசடி மன்னன்' ராமலிங்க ராஜுவின் தம்பி பி.சூரியநாராயண ராஜு சென்னையில் தலைமறைவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீசார் தேடுதல் வேட்டையைத் துவங்கியுள்ளனர்.
ராமலிங்க ராஜுவின் இரண்டாவது தம்பி இந்த சூரியநாராயண ராஜு. வெளியுலகுக்கு அதிகம் தெரியாத நபராக ஆனால், மிகப்பெரிய விவகாரங்களையெல்லாம் தன் அண்ணனுக்காக டீல் செய்தவர் இவர்தான்.
ராஜு சரணடைவதற்கு சில தினங்களுக்கு முன், சத்யம் நிறுவனத்தின் கிளை நிறுவனமான எஸ்ஆர்எஸ்ஆர் ஹோல்டிங்ஸ் வசமிருந்த அனைத்து நிலப்பத்திரங்களையும் இடம் மாற்றியவர் இவர்தான் என்று போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த வாரம் வரை ஹைதராபாத்தின் இருந்த இவர், இப்போது திடீரென தலைமறைவாகிவிட்டார். இவரது உறவினர்கள் மற்றும் மாமனார் வீடுகளும் பூட்டியே கிடக்கின்றன.
இவர் அகப்பட்டால், ராமலிங்கராஜுவின் முதலீடுகள், அவரது பினாமி கணக்குகள், அவர் பணத்தைப் பதுக்கியுள்ள நாடுகள் குறித்து முழுவதுமாகத் தெரிய வரும் என நம்புகிறது சிஐடி போலீஸ்.
இந்த நிலையில் அவர், சென்னைக்கு தப்பி வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
சென்னையில் உள்ள அவர்களது விருந்தினர் மாளிகையில் அவர் தங்கியிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தில் சென்னை போலீசாருக்கு தகவல் அனுப்பியுள்ளது ஆந்திர சிஐடி. அவர்களது ஒரு பிரிவும் சென்னைக்கு விரைந்துள்ளது.