ஐ.சி.யூவிலிருந்து பிரதமர் மாற்றம் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து மாற்றப்பட்டார் பிரதமர்
இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரதமர் தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நன்றாக தேறி வருகிறார்.
அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பிற்பகலுக்கு மேல் பிரதமரை தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து வேறு வார்டுக்கு டாக்டர்கள் மாற்றினர்.
இருப்பினும் சனிக்கிழமைக்கு முன்னதாக பிரதமர் டிஸ்சார்ஜ் செய்யப்பட மாட்டார் எனத் தெரிகிறது.
நேற்று தனது அறைக்குள் சிறிது நேரம் நடைப் பயிற்சி மேற்கொண்டார் பிரதமர். வழக்கமான உணவையும் அவர் உட்கொண்டார்.
அவருக்கு பிசியோதெரபியும் அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, காலிப் வகை இசையை கேட்பதில் அதிக நேரம் செலவழித்து வருகிறார் பிரதமர் என அவரது மகள் தாமன் சிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பிரதமர் நன்றாக ஓய்வெடுத்து வருகிறார். அதிக நேரம் இசையை ரசித்து கேட்கிறார். அவருக்கு நேற்று இரவு யாரோ ஒருவர் காலிப் இசை பாடல் தொகுப்பை கொடுத்துள்ளனர். அப்போதிலிருந்து அதை தொடர்ந்து விரும்பி கேட்டு வருகிறார்.
விரைவில் முழுமையாக குணமடைந்து வீட்டுக்கு போக வேண்டும் என்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறார். டாக்டர்கள் அவரது உடல்நிலை நன்கு தேறிவருவதாக தெரிவித்துள்ளனர். அது எங்களுக்கு உற்சாகம் அளிக்கிறது.
எனது தாயார் அவருக்கு துணையாக உடன் இருக்கிறார். நாங்கள் மூன்று சகோதரிகள் இருப்பதால் ஒருவர் மாற்றி ஒருவர் வந்து அவரை பார்த்து கொள்கிறோம். இன்று அவருடன் சேர்ந்து சாப்பிடலாம் என இருக்கிறேன்.
ஆபரேஷன் முடிந்த நிலையில் பலரும் வாழ்த்து சொன்னது மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்களுக்கு மிகவும் ஆறுதலாக அமைந்தது என்றார்.