வெங்கட்ராமன் உடல் தகனம் செய்யப்பட்டது
முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன் நேற்று மரணமடைந்தார்.
அவரது உடல் தகனம் இன்று மாலை டெல்லியில் நடந்தது. டெல்லியில் உள்ள ஏக்தா ஸ்தலத்தில் அவரது உடல் தகன நிகழ்ச்சி நடந்தது.
முழு அரசு மரியாதைகளுடன் வெங்கட்ராமனின் உடல் தகனம் நடந்தது.
முன்னதாக அவருக்கு இன்று தமிழக சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இன்று காலை சபை கூடியதும் சபாநாயகர் ஆவுடையப்பன் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார். ஆர்.வெங்கட்ராமன் சுதந்திரப் போராட்ட வீரராக திகழ்ந்தார். மிகச் சிறந்த தலைவராக விளங்கினார். மாநில அரசியலிலும், தேசிய அரசியலிலும் தனக்கெனி தனி வரலாறு வகுத்துக் கொண்டவர் வெங்கட்ராமன் என அதில் புகழாரம் சூட்டப்பட்டிருந்தது.
இதையடுத்து உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து எந்தவிதப் பணியையும் மேற்கொள்ளாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
பர்னாலா இரங்கல்
வெங்கட்ராமன் மறைவுக்கு ஆளுநர் பர்னாலா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், முன்னாள் இந்திய ஜனாதிபதி ஆர்.வெங்கடராமன் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவர் பலதுறைகளில் வல்லுனராக திகழ்ந்தார்.
பல்வேறு உயர் பதவிகளில் வகித்த அவர் நாட்டில் தொழில் புரட்சியை ஏற்படுத்தினார். அவருடைய மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்துவாடும் அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அரசு விழாக்கள் 7 நாட்களுக்கு ரத்து
வெங்கடராமன் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் பிப்ரவரி 2-ந் தேதி வரை 7 நாட்களுக்கு தமிழக அரசு துக்கம் அனுஷ்டிக்கிறது.
மாநிலம் முழுவதும்,தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். 7 நாட்களும் அரசு விழாக்கள் எதுவும் நடைபெறாது.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி இதை தெரிவித்துள்ளார்.