இலங்கைக்கு வேலைக்கு சென்ற தமிழக தொழிலாளர் கைது
சாத்தான்குளம்: இலங்கையில் தோட்ட வேலைக்கு சென்ற தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் அங்கு சிறைபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
சாத்தான்குளம் அருகேயுள்ள பெத்தாகாலன்விளையை சேர்ந்தவர் அந்தோணிகுரூஸ் சேகர். இவரது மனைவி புஷ்பகனி. இவர்களுக்கு 7 குழந்தைகள் உள்ளனர்.
விவசாய கூலி தொழிலாளியான இவரிடம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவர் இலங்கையில் தோட்ட தொழில் உள்ளதாகவும், நல்ல ஊதியம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், இலவசமாக இலங்கைக்கு அழைத்து செல்வதாகவும், கூறியுள்ளார். அதை நம்பி அந்தோணி குரூஸ் சேகர் ஆறு மாதங்களுக்கு முன் இலங்கைக்கு சென்றார்.
அங்கிருந்து இரண்டு மாதங்கள் வீட்டிற்கு பணம் அனுப்பினார். அதன்பிறகு ஒரு நாள் திடீரென ஊரிலுள்ள தனது மனைவிக்கு போன் செய்து தன்னை இலங்கை சில்வாயம் மாவட்டம், பித்தளம் தாலுகா, மாதாம்பிகை சில்வா டவுன் போலீசார் பிடித்து வைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அதற்கு பின்னர் கடந்த 4 மாதங்களாக அவரை பற்றி எந்த துப்பும் இல்லை. இதை தொடர்ந்து அவரது மனைவி புஷ்பகனி, கலெக்டர் பழனியாண்டி மற்றும் தொகுதி எம்எல்ஏ ராணி வெங்கடேஷன் ஆகியோரிடம் தனது கணவரை மீட்டுத் தரும்படி மனு கொடுத்துள்ளார்.