மீண்டும் இலங்கை வெறித் தாக்குதல் - 21 தமிழர்கள் பலி
கொழும்பு: பாதுகாப்பான பிரதேசத்திற்குள் தஞ்சம் புகும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என இந்தியாவிடம் இலங்கை அதிபர் ராஜபக்சே உறுதியளித்து 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், தஞ்சம் புகுந்த தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் 21 தமிழர்கள் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
புதன்கிழமை பிற்பகல் 1 மணி முதல் இரண்டரை மணி வரை இடைவிடாமல் இலங்கைப் படைகள் நடத்திய பீரங்கித் தாக்குதலில் 21 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 121 பேர் காயமடைந்தனர்.
உடையார்கட்டு, மூங்கிலாறு, தேவிபுரம், சுதந்திரபுரம், வல்லிபுனம் ஆகிய பகுதிகளில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.
முல்லைத்தீவில் உள்ள காந்தி சிறுவர் பராமரிப்பு இல்லம் மீது புதன்கிழமை நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு சிறுமிகள் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
உடையார்கட்டு, தேவிபுரம், வல்லிபுனம் பகுதிகளில் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் காயமடைந்தவர்களில் 45 பேர் புதுக்குடியிருப்பு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு மருத்துவமனை மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
இங்கு மொத்தம் 556 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 200 பேரை மேல் சிகிச்சைக்காக வவுனியா கொண்டு செல்ல வேண்டும். ஆனால் கொண்டு செல்வதற்கான நிலை அங்கு இல்லை.
வன்னியில் உள்ள அமெரிக்க மிஷன் திருச்சபையின் முறிகண்டி பங்குத்தந்தை ஆனந்தராஜாவும் எறிகணைத் தாக்குதலில் காயமடைந்துள்ளார். இவரின் ஆலயம் அமைந்துள்ள வளாகத்தில் விழுந்த எறிகணையினால் இவருடன் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இந்த 3 பேரும் முறிகண்டி திருச்சபையில் கல்வி பயலும் மாணவர்கள் என்று மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.