இங்குள்ள தமிழர்களின் உயிரும் முக்கியம் - அதை மாய்க்க வேண்டாம்: ராமதாஸ் வேண்டுகோள்
சென்னை: இலங்கைத் தமிழர்களின் உயிர் எவ்வளவு முக்கியமோ, அதேபோல தமிழகத்தில் உள்ள தமிழர்களின் உயிரும் முக்கியம். எனவே யாரும் உயிரை மாய்க்கும் செயலில் ஈடுபட வேண்டாம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் பெண்ணே நீ இதழின் ஊழியரான முத்துக்குமார் என்ற இளைஞர் இன்று காலை சாஸ்திரி பவன் வளாகத்தில் இலங்கைத் தமிழர்களைக் காக்க கோரி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து டாக்டர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெறும் தமிழினப்படுகொலை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழகம் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தமிழகத்தில் உள்ள எவரும் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் இறங்க வேண்டாம். அத்தகைய முயற்சியில் இறங்குவதை யாரும் ஆதரிக்கவும் முடியாது.
சென்னையில் முத்துக்குமார் என்ற இளைஞர் தீக்குளித்து உயிர் நீத்த துயரச் சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே நேரத்தில் இந்த நிகழ்வை பின்பற்றி தமிழகத்தில் எந்த ஒரு பகுதியிலும் எவரும் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இலங்கை தமிழர்கள் காக்கப்பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியமானது இங்குள்ள தமிழர்களின் உயிர்.
எனவே உயிரை மாய்த்துக் கொள்ளும் எத்தகைய முயற்சியிலும் எவரும் ஈடுபடக் கூடாது என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இதனை இலங்கைத் தமிழர்களே விரும்ப மாட்டார்கள் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
இதயத்தை சுட்டெரிக்கிறது - வைகோ
ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், முத்துக்குமார் என்னும் வீரத் தமிழ் இளைஞன், ஈழத் தமிழர்களின் துயரத்தை தாங்கிக் கொள்ள முடியாமல், தன்னையே நெருப்புக்கு தாரை வார்த்தான் எனும் செய்தி நம் இதயத்தை சுட்டு எரிக்கிறது.
முத்துக்குமாரை இழந்து துன்பத்தில் துடிதுடிக்கும் அவரது பெற்றோருக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் கண்ணீர் அஞ்சலியை தெரிவிக்கிறேன்.
ஈழத்தமிழரின் தியாக வரலாற்றில், முத்துக்குமாரின் தியாகமும், புகழும் நிலைத்து நிற்கும். தாய்த் தமிழகத்தின் இளந்தமிழ் மனங்கள் எரிமலையாக சீறத் தொடங்கி விட்டதை இப்போதாவது தமிழருக்கு துரோகம் செய்யும் மத்திய அரசு உணரட்டும்.
சிங்கள அரசு நடத்தும் இனக்கொலை போரை தடுக்க முன்வரட்டும். செய்துவரும் துரோகத்தை இனியாவது நிறுத்தட்டும். தமிழர் நலனுக்காக வாழ்ந்து போராட வேண்டிய வாலிபர்கள், இப்படித் தங்களையே அழித்து கொள்ளும் செயல்களில் ஈடுபட வேண்டாம் என மன்றாடி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications